
அடிதடி, பரபரப்புகளுக்கு இடையே நடந்து முடிந்த கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 8 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனால் கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடந்த மறைமுகத் தேர்தலின் போது திமுக-அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அதே போல மதியம் துணைத் தலைவர் தேர்தல் நடந்த போது வாக்கு பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதால் துணைத் தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் வெள்ளலூர் பேரூராட்சியின் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் பேரூராட்சி அலுவலகம் அருகே இரு கட்சியினரும் கூடத் துவங்கினர்.
அப்போது தேர்தலில் கலந்து கொள்ள திமுக அதிமுக கவுன்சிலர்கள் வந்த போது, திமுக-அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் வெள்ளலூர் 4 ஆவது வார்டு திமுக உறுப்பினர் குணசுந்தரியின் கணவர் செந்தில்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு ஆம்புலென்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அவர் ஆம்புலென்ஸில் ஏறாமல் சாலையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறை வாகனம் மீது நடந்த தாக்குதலில் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அனைவரையும் விரட்டியடித்தனர்.
மேலும் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே காவல்துறை நடத்திய தடியடியில் பார்த்திபன் என்பவரது தலையில் அடிப்பட்டது. மேலும் ராஜேந்திரன் காலில் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இத்தகைய அடிதடி, பரபரப்புகளுக்கு இடையே கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நிறைவு அடைந்தது. இதில் பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த மருதாச்சலம் வெற்றி பெற்றார். துணை தலைவருக்கான தேர்தலில் அதிமுகவின் கணேசன் வெற்றி பெற்றார். இதை அடுத்து இவர்கள் இருவரும் தலைவர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.