
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்" தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசும், காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் கர்நாடக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தொல்லைகள் கொடுத்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பேபி அணையைப் வலுப்படுத்தவும் ஏதுவாக அங்குள்ள மாங்களை வெட்டவோ, கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லவோ கோள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது.
கேரள அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் தன்னிச்சையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது, தன்னிச்சையாக ஆய்வு செய்வது போன்றவற்றையும் கேரள அரசு மேற்கொண்டு வந்ததோடு, அலுவலகப் பணிகளைப் பராமரிக்கத் தேவையான தளவாடப் பொருட்களைக்கூட எடுத்துச் செல்லவும் இடையூறு ஏற்படுத்தியது. முல்லைப் பெரியாறு அணை என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒர் அணையாகும். இதனைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் கேரள அரசின் அண்மைக்கால நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
கேரள அரசின் செயல்பாடு இப்படி என்றால், கர்நாடக அரசின் செயல்பாடு இதைவிட மோசமாக இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டப்படும் என்றும், தேவைப்பட்டால் மாண்புமிகு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திப்போம் என்றும் கூறியிருக்கிறார் கர்நாடக முதலமைச்சர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடாக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு மற்றும் காவேரி பிரச்சனை குறித்து முதல்வர் அவர்களும், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இதுகுறித்து நான் பல அறிக்கைகளை விடுத்தும், இதுகுறித்து மவுனம் சாதிப்பது கவலை அளிக்கிறது. தி.மு.க. குடும்பத்திற்கு கர்நாடகா மற்றும் கேரளாவில் வணிக ரீதியான செயல்பாடுகள் இருப்பதால், தி.மு.க. இதனைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. இதேபோல், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுவதால், தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் திறக்காமல் இருக்கின்றனவோ, கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி பேசாமல் இருக்கிறதோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது.
பெரியாறு மற்றும் காவேரி நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிட ஏதுவாக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி கேரள, கர்நாடக அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து, தமிழ்நாட்டின் பலத்தை பறைசாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுவதாக தெரிவித்துள்ளார்.