
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ :
மதுரை அதிமுக அலுவலகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சொத்துவரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்த அரசு திமுக. வாக்களித்த மக்களுக்கு இந்தளவுக்கு யாரும் துரோகம் செய்தது கிடையாது. சொத்து வரி உயர்வை கண்டித்து, ஏப்ரல் 5 ம் தேதி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் , தற்போதைய திமுக அரசால் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
தற்போது திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.கடந்த 11 மாத காலமாக மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. சொத்து வரி உயர்வு குறித்து, தி.மு.க அமைச்சர் நேரு, கூறுகையில் பிப்ரவரி 31 ம் தேதிக்குள், சொத்து வரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு கூறியதாக அமைச்சர் கூறினார்.
எந்த காலத்திலாவது பிப்ரவரி 31 ம் தேதி வந்துள்ளதா என கேள்வி எழுப்பினார். அம்மா மினி கிளினிக் திட்டம், அம்மா குடிநீர் திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் இவை தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் சொத்து வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியதற்கே எதிர்க்கட்சியாக இருந்த திமுக இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் இது வரி உயர்வா அல்லது சொத்து அபகரிப்பா என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மீண்டும் ராமராஜ்யம் :
தமிழ்நாட்டில், தற்போது ஊரக நகர்ப்புற தேர்தல்கள் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சொத்து வரி உயர்வு என்பது மாவட்ட, மாநகர எல்லைக்குள் மக்கள் பிரதிநிதிகள் முடிவு செய்ய வேண்டிய நிலையில், அதிகாரத்தை அரசு தன் கையில் எடுத்துக்கொண்டு இந்த முடிவை அறிவித்துள்ளது முற்றிலும் தவறானது. பத்தாண்டு காலம் தமிழகத்தில் அதிமுக நடத்தியது தான் ராமராஜ்யம்.
எம்ஜிஆர் நடத்தியது ராமராஜ்யம். அதிமுக ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள் அதுதான் ராமராஜ்யம் அதைத்தான் ஆளுநர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். திமுக ஆட்சியால் தமிழகம் கலியுகம் ஆக மாறிவிட்டது. விரைவில் தமிழகம் ராமராஜ்யம் ஆக மாறும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் ராம ராஜ்ஜியத்தை அதிமுக கொடுக்கும்' என்று கலகலப்பாக பேசினார்.