சசிகலாவை ஜாடை மாடையாக சாடிய எடப்பாடியார்... நீதிமன்றம் வரை சென்று அதிரடி...!

Published : Jul 19, 2021, 06:45 PM ISTUpdated : Jul 19, 2021, 06:46 PM IST
சசிகலாவை ஜாடை மாடையாக சாடிய எடப்பாடியார்... நீதிமன்றம் வரை சென்று அதிரடி...!

சுருக்கம்

அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்குமாறு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . 

அதிமுக கட்சி விதிப்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை  உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டுமென்ற நிலையில், கடந்த 2014 அக்டோபர் மாதத்திற்கு பிறகு  உட்கட்சி தேர்தல் நடைபெறவில்லை இதனை சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞரும், அதிமுக தொண்டருமான சூர்யமூர்த்தி என்பவர் தன்னுடைய மனுவில், அதிமுக கட்சி விதியின்படி, பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதியை திருத்த முடியாது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்ற நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் இன்றி வந்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டினார். கட்சியில் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பழைய விதிகளின் படி கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 

பொதுச் செயலாளர் பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது கட்சியின் விதிகளுக்கு முரணானது எனவும், மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு முரணானது எனவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.  இந்த மனுவை விசாரித்த சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோரை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

 

இந்த வழக்கு இன்று  சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சூரிய மூர்த்தியின் மனுவை நிராகரிக்க கோரி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில்  மனுதாக்கல் செய்யபட்டது. அந்த  மனுவில், சூரிய மூர்த்தி இன்றைய தேதியில் அதிமுக உறுப்பினரே இல்லை என்பதால்  இந்த வழக்கை தொடர அவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும், வேறு சிலரின் தனிபட்ட நலனுக்காக கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும், முகத்தை காட்ட விரும்பாத சிலர் பின்னால் இருந்து மனுதாரரை இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை  தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தை கேள்வி கேட்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா சூழல் காரணமாக உட்கட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் வரும் டிசம்பர் மாதம் 2021 வரை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் மனுதாரர் தகவல்களை மறைத்துள்ளதாவும், அவர் உறுப்பினர் தான் என்பதை நிரூபிப்பதற்கான  ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை எனவும், ஒரே கோரிக்கைக்கு பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளதால், நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.  இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
 


 

PREV
click me!

Recommended Stories

Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!