மாநிலங்களவை தேர்தல்.. சொல்லியடித்த சி.வி. சண்முகம்.. தென் மண்டலத்துக்கு சீட்டை உறுதி செய்த ஓபிஎஸ்!

Published : May 25, 2022, 10:56 PM ISTUpdated : May 25, 2022, 10:59 PM IST
மாநிலங்களவை தேர்தல்..  சொல்லியடித்த சி.வி. சண்முகம்.. தென் மண்டலத்துக்கு சீட்டை உறுதி செய்த ஓபிஎஸ்!

சுருக்கம்

முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகமும்; முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருமான ஆர். தர்மர் ஆகியோர் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

மாநிலங்களவைக்கு 15 மாநிலங்களில் 57 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 10-இல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் 159 இடங்கள் திமுக கூட்டணிக்கு இருப்பதால் தேர்தலில் அக்கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைப்பது உறுதி. இதில் ஓரிடத்தை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமார் ஆகியோரை வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்துவிட்டது.

அதிமுகவுக்கு இரண்டு எம்.பி.க்கள் கிடைப்பதும் உறுதியாகிவிட்டது. அதிமுகவில் வடக்கு மண்டலத்துக்கும் தெற்கு மண்டலத்துக்கும் எம்.பி. பதவியை ஒதுக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முடிவு செய்திருந்தார்கள். வடக்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி. சண்முகம், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் அந்தப் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக வடக்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் - சி.வி.சண்முகம் இடையே போடி பலமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. 

இதேபோல தெற்கு மண்டலத்தில் ராஜன் செல்லப்பா தன்னுடைய மகனுக்கும், மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வாய்ப்பு கேட்டு தளவாய் சுந்தரம் போன்றவர்கள் ஓபிஎஸ்ஸுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. தெற்கு மண்டலத்துக்கு எம்.பி. சீட்டு ஒதுக்குவதில் ஓபிஎஸ்ஸும் உறுதியாக இருந்தார். மேலும் அதிமுகவில் பலரும் எம்.பி. பதவியைக் கேட்டு அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததால், வேட்பாளரை அறிவிப்பதும் தாமதமானது.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பா:ளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதன்படி  முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகமும்; முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருமான ஆர். தர்மர் ஆகியோர் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இதன்மூலம் அதிமுகவில் யார் வேட்பாளர்கள் என்ற எழுந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!