6 நாடாளுமன்ற தொகுதி …. 1 ராஜ்யசபா சீட்…. பேசி முடிக்கப்பட்ட அதிமுக- பாமக கூட்டணி !!

By Selvanayagam PFirst Published Dec 22, 2018, 9:12 AM IST
Highlights

பாஜக  கொடுக்கும் நெருக்கடிகளைத் தாண்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனி கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாமகவுடன் கூட்டணி பேசி முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயாராக உள்ள பாஜக 20 க்கு 20 என அதிமுகவிடம் டீல் பேசி வருவதாக தகவல் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்காக இரு அணிகளையும் இணைக்கச் சொல்லியும் அந்தக் கட்சி செய்து வரும் டாச்சரால் நொந்து போயுள்ள எடப்பாடி பழனிசாமி, தனி ரூட் ஒன்றைப் பிடித்திருக்கிறார்.

தற்போது வட மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்குடன் திகழும் பாமகவை வளைத்துப் போட்டால் என்ன? என்ற அவரின் திட்டத்துக்கு அதிமுக புள்ளி ஒருவர், செயல் வடிவம் கொடுக்க முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

என்ன தான் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடித்துச் சொன்னாலும். போகிற போக்கில் கூட்டணி இல்லாமல் இனி எதையும் சாதிக்க முடியாது என்பதையும் உணர்ந்துதான் இருக்கிறார். இதைத் தொடர்நதுதான் அன்புமணி அடிக்கடி கூட்டணி குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் அதிமுக,  கூட்டணி குறித்து பாமகவின் முக்கிய தலைவர்களுடன் பேச்சவார்த்தை நடத்தியிருக்கிறது.  திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும்  சென்னை  அதனை ஒட்டியுள்ள 2 தொகுதிகள் என மொத்தம் 5 தொகுதிகளை பாமகவுக்காக ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது. ஆனால் பாமகவோ 10 தொகுதிகள் வேண்டும் என அடம் பிடிக்கிறது.

இறுதியில் 6 நாடாளுமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என பேசி முடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்டரின் பதிலுக்காக வெயிட் பண்ணிவரும் அதிமுக விரைவில் டீலை முடிக்க எண்ணுகிறது.

அதே நேரத்தில் வேறு சில கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

click me!