பாஜக – அதிமுக மெகா கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம் தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Jan 17, 2019, 7:34 PM IST
Highlights

அதிமுக, தேமுதிக, பாமக அடங்கிய மெகா கூட்டணியை உருவாக்க முயற்சி செய்யும் பாஜக இதற்காக பேச்சு வார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை சென்னை வருவதாக இருந்த நிலையில் அவரது தமிழக பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக  உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், இடது சாரிகள்,விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி உருவாகும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் பாமக இணைந்த கூட்டணி ஒன்றும் உருவாக உள்ளதாக தகவல்கள் ரெறக்கை கட்டிப் பறக்கின்றன. ஏற்கனவே இந்த கூட்டணி பேச்சு வார்த்தை திரை மறைவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை 'தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி பேச்சை தொடங்கலாம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். பாஜகவுடன்  கூட்டணியா ? என்ற கேள்விக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என பதில் அளித்தார்.

அதேபோல்,'தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்' என இபிஎஸ் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில்  பாஜகவுடன் கூட்டணி என்பதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்புக் குரலும் கேட்காமல் இல்லை.

இதுவரை திரைமறைவில் நடந்த பேச்சை இறுதி செய்வதற்காக, தமிழக, பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல், நாளை, சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடக்கும், தமிழக, பாஜக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்திலும், அவர் பங்கேற்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. 


இந்த கூட்டணி பேச்சு  வார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், வரும், 27 ஆம் தேதி  மதுரையில் நடைபெறவுள்ள, பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி, கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் திடீர் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

எடப்பாடி பழனிசாமி மீதான கோடநாடு குற்றச்சாட்டு அதிமுகவை நிலை குலைய வைத்துள்ளதால் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷாவுக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிகிசைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்பை பியூஸ் கோயலிடம் விட்டுச் சென்றுள்ளதாலும்  அவர் சென்னை வருவதற்கு தாமதம் ஆவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பியூஸ் கோயல் 20 ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!