ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கிறது பாஜக !! நாடாளுமன்றத்தைத் தெறிக்கவிட்ட ஆ.ராசா !!

By Selvanayagam PFirst Published Jul 29, 2019, 9:22 PM IST
Highlights

பொதுப்பட்டியலில் உள்ள மருத்துவக் கல்வியிலும்  தனது ஆதிக்கத்தை நிறுவ பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை அழிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்துள்ளதாகவும்   திமுக  எம்.பி ஆ.ராசா  மிகக் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

63 ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956க்கு பதில், தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதாவை மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார். இந்த புதிய ஆணையம், மருத்துவ கவுன்சில், ஆலோசனைக் குழு, தன்னாட்சி குழு என மூன்று பகுதிகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆணையம் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை விட தனியாருக்கே சாதகமாக அமைந்துள்ளது. எனவே, பாஜக  அரசின் இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று மக்களவை கூட்டத்தின் போது, தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க மக்களவை கொறடா ஆ.ராசா, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துவிடும் என்றும், இது நாட்டின் சுகாதார கட்டமைப்பையே நாசமாக்கிவிடும் என்றும் எச்சரித்தார்.

தேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கும், ஜனநாயகத்துக்கும் முற்றிலும் எதிரானது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையிலும், பொதுப்பட்டியலில் உள்ள மருத்துவக் கல்வியிலும் மத்திய அரசு தனது ஆதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது  என ஆ.ராசா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஏற்கெனவே நீட் தேர்வினால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு கலைக்கப்பட்டு, சிலர் உயிரையும் மாய்த்துக்கொண்டனர். இருப்பினும் போராடி ஒருவழியாக ஒரு மாணவன் நீட்டில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் 70க்கும் மேற்பட்ட சதவிகிதத்திற்கு மதிப்பெண் எடுத்திருந்தாலும் மருத்துவர் பயிற்சியை பெற முடியாது. அதற்கும் நெக்ஸ்ட் என்ற தேர்வை எழுத வைக்கிறீர்கள். 

ஒருவேளை அந்த தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டால் தன் வாழ்நாளில் மருத்துவராக வேண்டி அந்த மாணவன் கண்ட கனவும் படிப்புக்கான உழைப்பு அனைத்தும் வீணாகி வெறும் 12ம் வகுப்பு படித்தவனாகவே கருதப்படுவான்  என நுழைவு தேர்வுகளின் ஆபத்துகளை ஆ.ராசா ஆவேசமாக  எடுத்துரைத்துள்ளார்.

click me!