
காவிரிபிரச்சனையில் நம்பிக்கை தரும் தீர்ப்பாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. முதலில் ஒத்துகொண்ட மத்திய அரசு பின்னர் பின் வாங்கியது. மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மறுத்தது.
கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் இந்த போக்கை தமிழகத்தில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் கண்டித்தன. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் தற்போது 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறந்துவிடாததால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.
எனவே, காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றன. ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, கடந்த 6-ந் தேதி சென்னையில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக் கத்தினர் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் அக்டோபர் 17 (இன்று), 18-ந் தேதிகளில் (நாளை) தொடர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பாஜக, அதிமுக தவிர பங்கேற்பதாக அறிவித்தன. ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என மொத்தம் 200 இடங்களில் இந்த ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதில், பெரம்பூரில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
அவர் தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர் ஊர்வலமாக பெரம்பூர் ரயில்நிலையம் நோக்கி வந்தனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் , சேகர்பாபு, ரங்கநாதன், பூங்கோதை உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.