18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பரபரப்பு இறுதி வாதம்!! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு !!

By Selvanayagam PFirst Published Aug 31, 2018, 2:49 PM IST
Highlights

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகர் தனபாலால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பான இறுதி வாதம் நடைபெற்றது. இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு  எதிராக ஆளுநரிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்  மனு அளித்த விவகாரத்தில் 18 பேரை சபாநாயகர் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர்  ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த  ஜூன் 14ஆம் தேதி  இரு மாறுபட்ட தீர்ப்புகளை  வழங்கியதால், ஜூலை 23ஆம் தேதி முதல் மூன்றாவது நீதிபதி எம்.சத்யநாராயணன் விசாரித்து வருகிறார்.

மூன்றாவது நீதிபதி முன்பு தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரமும், முதலமைச்சர்  தரப்பில் மூத்த வழக்கறிஞர் .எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி  12 நாட்களாக தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

13வது நாளான இன்று, சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதங்கள் முன்வைத்து முடித்தார். இதையடுத்து எழுத்துப்பூர்மான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமா என வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கேட்டனர். அதனை மறுத்த நீதிபதி சத்ய நாராயணன், நீங்கள் ஏற்கனவே அளித்த எழுத்துப் பூர்வமான வாதமே போதும் என கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களும்  முடிந்த நிலையில்   இந்த வழக்கில்  3-வது நீதிபதி  சத்ய நாராயணன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்

click me!