கல்லூரி மாணவி ஒருவருக்கு தொடர் பாலியல் தொந்தரவு அளித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. தற்கொலைக்கு காரணமான இரண்டு சகோதரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம், கான்பூரின், சித்வேக்ஹேடா கிராமத்தைச் சேர்ந்தவர் நேகா குஸ்வானா (22). கல்லூரி மாணவியான இவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேகாவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சித்வேக்ஹேடா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கோரி மற்றும் சகோதரர் சோனு ஆகியோர் அந்த பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
அவர்களின் தொடர் பாலியல் தொல்லையைத் தாங்க முடியாத அந்த இளம் பெண் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்கொலை தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நேகாவின் சடலத்தில் இருந்து கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு சஞ்சய் கோரி மற்றும் அவரது சகோதரர் சோனு அதில் குறிப்பிட்டுள்ளார். தன்னை இந்த நிலைக்கு தள்ளிய அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் நேகா கடிதத்தில் கூறியுள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்தார்.