சபரிமலையில் நாளை நடக்கப்போவது என்ன..? தேவசம்போர்டு அமைச்சர் அறிவிப்பால் பதற்றம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 15, 2019, 2:25 PM IST
Highlights

சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் பாதுகாப்பு தர மாட்டோம் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. 

பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல வேறு கோவில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை கடைப்பிடிக்க உரிமை உள்ளது. மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது. மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எனக்கூறி இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு  உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. 

இந்நிலையில் சபரி மலைக்கு செல்ல 36 பெண்கள் ஆன்லைன் மூலம் அனுமதி கோரியுள்ளனர்.  இந்நிலையில் சபரிமலைக்கு பெண்கள் வரும்போது பாதுகாப்பு குறித்து அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசுகையில், ‘’சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்டுள்ளோம். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் சட்ட நுணுக்கங்களை தெரிவித்துள்ளனர். 

அதன்படி இப்போதைக்கு சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது. நாளை நடை திறக்க உள்ள நிலையில் பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதை அரசு ஆதரிக்காது. சபரிமலை கோவிலில் தற்போதுள்ள நிலையே தொடரும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம். நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்’’எனத் தெரிவித்துள்ளார். 

பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலை வருவதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது, சபரிமலை கோவில் வளாகம் ஆர்வலர்களுக்கான இடம் அல்ல. கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் சபரிமலையில் நாளை என்ன நடக்கப்போகிறது ? என்கிற பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே சபரிமலையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  சபரிமலைக்கு வரும் பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பும் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது. 

click me!