நம்ம ஊராம்லே அவங்க...! நம்ம ஊருக்குத்தான் பெருமை! நெகிழும் ஸ்ரீதேவியின் சொந்த ஊர் மக்கள்!

First Published Feb 25, 2018, 5:04 PM IST
Highlights
We are proud of our town! Sridevi hometown people!


லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஸ்ரீதேவியின் உண்மையான பெயர் ஸ்ரீ அம்மா. பின்னர் சினிமாவுக்காக அந்த பெயரை ஸ்ரீதேவி என மாற்றிக் கொண்டார். அயப்பன் - ராஜேஸ்வரி தம்பதியின் மகளாவார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த மீனம்பட்டியைச் சேர்ந்தவர். ஸ்ரீதேவியின் தந்தை வழக்கறிஞராக பணியாற்றியவர். 1971 ஆம் ஆண்டில் மலையாள படமான பூம்பட்டா என்ற படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது எட்டு.

தமிழ் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவியை பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தது இயக்குநர் பாராதிராஜா. 16 வயதினிலே திரைப்படம் இந்தியில் சோல்வா சாவான் திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டதன் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாக கோலோச்சத் தொடங்கினார். தமிழை தாய்மொழியாக கொண்டவர் என்பதால் இந்தியில் பேசுவதற்கு சிரமப்பட்டடார். அவருக்காக, நடிகைகள் நாஸ், ரேகா உள்ளிட்டோர் குரல் கொடுத்து வந்தனர். ஸ்ரீதேவி இந்தியில் சொந்தக் குரலில் பேசி நடித்த படம் சாந்தினி. 

பாலிவுட் திரைப்படம் லம்ஹே படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவரது தந்தை உயிரிழந்த செய்தி வந்தது. இறுதி சடங்கில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி உடனடியாக மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பினார். தான் ஒப்புக் கொண்ட படங்களை, குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பதில் உறுதியாக இருந்தார் அவர். அதேபோல், சால்பாஸ் படப்பிடிப்பின்போது 103 டிகிரி காய்ச்சல் இருந்தபோதும் அதை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவிட்டில் வெற்றி ராணியாக வலம் வந்த ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு, வட இந்தியரைப் போலவே அனைவராலும் பார்க்கப்பட்டு வந்தார். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது சிலருக்குத் தெரிந்தாலு, தெற்கத்தி கரிசல் மண்ணைச் சேர்ந்தவர் என்பது பலருக்கு தெரியாது. ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்த செய்தியைக் கேட்ட மீனம்பட்டி மக்கள், ஸ்ரீதேவி நம்ம ஊராம்லே என்று கூறி அனுதாபத்தை தெரிவித்து வருகிறார்கள். சில குடும்ப விழாக்களுக்கு, மீனம்பட்டிக்கு வந்திருக்காங்க. ஆனால், மும்பைக்குச் சென்ற பிறகு அவர் அதிகம் வரவில்லை என்ற கிராமத்து மக்கள் அவங்களால எங்க ஊருக்குப் பெருமைதான் என்று கூறி வருகின்றனர்.

click me!