இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் பேசிய நிதின் கட்காரி, நாடு முழுவதும் உள்ள 1.6 லட்சத்திற்கும் மேலான பாலங்களின் உறுதித்தன்மை குறித்து சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்ததாக குறிப்பிட்ட அவர், நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தப் பாலங்களை சரி செய்ய உடனடி நடவடிக்கை தேவைப்படுவதாகவும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை திட்டங்கள் தாமதமாவதற்கு ஆக்கிரமிப்புகள், நிலம் கையகப்படுத்துதல் சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் போன்றவை காரணமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ரூ. 3.85 லட்சம் கோடிக்கும் மேலான சாலை திட்டப்பணிகள் பல்வேறு காரணங்களால் தாமதம் ஆகியுள்ளதாகவும் அவை சீர் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் நிதின் கட்காரி கூறினார்.