இந்திய அரசை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி பதுக்கிவைத்த பெரு நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்ட 714 இந்தியர்களின் பெயர்கள் ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ எனும் பெயரில் வெளியாகியுள்ளன.
இதில் மத்திய அமைச்சர், நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் சஞ்சய்தத் மனைவி, நீரா ராடியா, விஜய் மல்லையா, பா.ஜனதா எம்.பி., ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் உள்பட பலரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
நெருக்கடி அதிகரிப்பு
மத்திய அரசு ரூபாய் நோட்டு தடையை கொண்டு வந்து நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த நாளை கறுப்பு நாளாக அனுசரிக்க காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில், ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ வெளியாகி இருப்பது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
அன்று பனாமா; அன்று பாரடைஸ்
அரசுகளை ஏமாற்றி வரிசெலுத்தாமல், வெளிநாடுகளில் சொத்துக்களைச் சேர்த்து வைத்துள்ளவர்கள் குறித்த சர்வதேச பட்டியல் கடந்த ஆண்டு மே மாதம் ‘பனாமா ேபப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியானது அதேபோல இப்போது ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்ற பெயரில் அம்பலமாகி இருக்கிறது.
பொன்சேகா
பனமா பேப்பர்ஸ் விவகாரத்தில் தனிநபர்கள் வரி ஏய்ப்பு செய்து, சொத்துக்களை வாங்கிசேர்த்து வைக்க பனாமா நாட்டைச் சேர்ந்த ‘மொசாக் பொன்சேகா’ என்ற சட்ட ஆலோசனை நிறுவனம்தான் முக்கிய பங்கு வகித்தது.
ஆப்பிள் பை
ஆனால், ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ விவகாரத்தில் பெர்முடா நாட்டைச் சேர்ந்த ‘ஆப்பிள் பை’, சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஆசியாசிட்டி’ ஆகிய சட்ட நிறுவனங்கள் தனிநபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து சொத்துக்கள் வாங்கிக்குவிக்க உதவியுள்ளன.
இந்த விவரங்கள் அனைத்தும் ஜெர்மன் நாட்டில் இருந்து வெளிவரும் ‘சுடேட்சே ஜெய்டங்’ என்ற நாளேட்டில் இருந்து சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு பெற்று (ஐ.சி.ஐ.ஜே.) விசாரணை நடத்தியுள்ளது.
1.34 கோடி பக்கங்கள்
இந்த விசாரணைக்க உதவியாக 93 நிறுவனங்களை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சேர்த்துள்ளது. பாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரத்தில் மொத்தம் 1.34 கோடி பக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன.
பனமா பேப்பர்ஸ் விவகாரத்தை விசாரித்து வெளியிட்டதுபோல் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனமும் கடந்த 10 மாதங்களாக விசாரணை செய்து இதை இப்போது, வெளியிட்டுள்ளது.
இந்த வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் உலக அளவில் 19 நாடுகளின் தீவுகளில் சொத்துக்களை வாங்கி குவிக்க, ‘ஆப்பிள் பே’ நிறுவனம் உதவியுள்ளது.
யார் இந்த ஆப்பிள் பே?
பெர்முடா நாட்டைச் சேர்ந்த 119 ஆண்டு பழைமை வாய்ந்த சட்ட ஆலோசனை நிறுவனம் ‘ஆப்பிள் பே’.
பணி என்ன?
இந்த நிறுவனத்தின் பணி என்னவென்றால், உலக நாடுகளில் இருக்கும் பெரும் கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், பெரு நிறுவனங்கள் தாங்கள் சார்ந்திருந்தும் நாடுகளின் அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து, சேர்த்த பணத்தை உலகத்தில் உள்ள குறிப்பிட்ட சிறு தீவு நாடுகளில் முதலீடு செய்ய உதவுவதாகும். மேலும்ம், சொத்துக்கள் வாங்கிக்கொடுக்க உதவுவதும், போலி நிறுவனங்கள் தொடங்கி அதில் முதலீடு செய்ய வைத்து, அதை பராமரிப்பதும் ஆகும்.
இந்த ‘ஆப்பிள் பே’ நிறுவனம் சர்வதேச உளவில் வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், தணிக்கை அதிகாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்டவர்களை வைத்துள்ளது. இவர்கள் மூலம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கிக்கொடுக்கவும், வங்கிக்கணக்கு ஏற்பாடு செய்து தரவும் செய்கிறது.
அது மட்டுமல்லாமல், தங்களின் வாடிக்கையாளர்களின் சொத்துக்களை பராமரிப்பது, அவர்களின் போலி நிறுவனத்தின் கணக்குகளை பராமரிப்பது, குட்டி விமானங்களை வாங்கிக்கொடுப்பது, சொகுசு வாகனங்களை வாங்கிக்கொடுப்பது ஆகிய பணிகளை இந்த ஆப்பிள் பே நிறுவனம் செய்து வருகிறது.
சிக்கிய 714 இந்தியர்கள்....
பாடைஸ் பேப்பர்ஸ் ஆவணத்தில் 180 நாடுகளின் முக்கிய தலைவர்கள், தொழில் அதிபர்கள், பெரு நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய 19 இடத்தில் உள்ளது. இந்தியர்கள் 714 பேரின் பெயர்கள் இந்த பாரடைஸ் பேப்பர்ஸில் இடம் பெற்றுள்ளது.
இதில் குறிப்பாக ஆப்பிள் பே நிறுவனத்தின் நெருங்கிய வாடிக்கையாளராக ‘சன் குரூப்’ நிறுவனத்தின் நந்த் லால் கெம்காஉள்ளார். மேலும் வெளிநாடுகளில் 118 நிறுவனங்களை ஆப்பிள் பே நிர்வகிக்கிறது.
ேமலும், ஆப்பிள் பே நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள், நிறுவனங்கள், சி.பி.ஐ., அமலாக்கப்பரிவு விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
யார் இடம் பெற்றுள்ளனர்?
இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரத்தில், சன்டிவி- ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள், எஸ்ஸார்-லூப் நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும், எஸ்.என்.சி.-லலாவின் நிறுவனம். இந்த நிறுவனத்தோடு முதலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர் சேர்க்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
கார்த்தி சிதம்பரம்
ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழலில் ஈடுபட்டு சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியுள்ள ‘ஜிக்கியுஸ்டா ஹெல்த்கேர்’ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளனர். மேலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பெயரும் இடம் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சர் , அமிதாப், நீரா ராடியா
தனிநபர்கள் அடிப்படையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி தில்நாஷின், கார்ப்பரேட்தரகர் நீரா ராடியா, மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பா.ஜனதா மாநிலங்கள் அவை எம்.பி.யும், எஸ்.ஐ.எஸ். செக்யூரிட்டி நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.கே. சின்ஹா ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
விஜய்மல்லையா
ேமலும், வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா குறித்தும் இடம் பெற்றுள்ளது. அதில், யுனெட்டெஸ் லிமிட்டஸ் நிறுவனம் கோடிக்கணக்கான டாலர்கள் வாங்கிய கடனை,டியாகியோ நிறுவனம் தள்ளுபடி செய்தது குறித்தும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஜி.எம்.ஆர். குழுமத்தில் வருமான வரித்துறை கடந்த ஆண்டு ரெய்டு நடத்தியபோது, வெளிநாடுகளில் 28 போலி நிறுவனங்கள் மூலம் சொத்துக்கள் சேர்த்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவணங்கள்் சிக்கின. 28 போலி நிறுவனங்களையும் ஆப்பிள் பே நிறுவனம்தான் உருவாக்கி கொடுத்துள்ள தகவலும் இடம் பெற்றுள்ளது.
நிறுவனங்கள்
மேலும், ஜிண்டால் ஸ்டீல், அப்பல்லோ டயர்ஸ் ஹவேல்ஸ் நிறுவனம், இந்துஜா குழுமம், எமார் எம்.ஜி.எப்., வீடியோ கான்,ஹிராநந்தன் குழுமம், டி.எஸ். கட்டுமான நிறுவனம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சர்வதேச அளவில்...
சர்வதேச அளவில் உள்ள பெரிய நிறுவனங்கள், தனிநபர்கள் குறித்த தகவலும் பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்களில் கசிந்துள்ளது. அதில் பேஸ்புஸ், டுவிட்டரில் முதலீடு செய்துள்ள ரிஷிய நிறுவனங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட்டிரம்பின் வர்த்தகச் செயலாளர் வில்பர் ராஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியு, இங்கிலாந்து ராணி எலிசபெத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சவுகத் அஜிஸ் உள்ளிட்ட 120 அரசியல் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் உளவு விமானங்கள் வாங்கிக்கொடுத்தது, ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹூசனைக்கு, பர்படாஸ்வெடிமருந்து நிறுவனம் ‘சூப்பர் கன்’ தயாரித்து கொடுக்க முயற்சித்தது, மருந்து மற்றும் நுகர்வோர் கடன் நிறுவனத்தில் கோடிக்கணக்கான டாலர்களை இங்கிலாந்து ராணி எலிசபெத் முதலீடு செய்தது போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன.