
நர்சிங் பாடத்திட்டத்தின், சமூகவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிற வரதட்சணை தொடர்பான கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில்`வரதட்சணையின் பலன்கள்' எனும் தலைப்பில், 'திருமணத்தின்போது தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப்பொருள்களை வழங்குவதால், வரதட்சணை ஒரு குடும்பத்தைக் கட்டமைப்பதற்கு உதவுகிறது என்றூ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர் சொத்தில் பெண்களுக்கு சமபங்கு கிடைக்க இந்த வரதட்சணை வாங்கும் முறை உதவுகிறது என்றும் படித்து, வேலைபார்க்கும் பெண்கள் குறைவான வரதட்சணை கொடுத்தாலே போதுமானதாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க தொடங்கியுள்ளதாகவும் பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதில் வரதட்சணைக்கு மறைமுக பங்கிருக்கிறது என்று எழுதப்பட்டுள்ளது.
இதை விட ஒரு படி மேலாக, அசிங்கமான தோற்றம் கொண்ட பெண்கள்கூட அதிக வரதட்சணை கொடுத்து அழகான ஆணைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று என்று அச்சிடப்பட்டிருக்கிறது. தற்போது இதுக்குறித்தான கருத்துகள் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும் ஒரு பெண் ஆவர். இந்நிலையில் பாடப் புத்தகத்தில் வரதட்சனை கருத்துகள் இடம்பெற்றிருந்த பக்கங்கை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இதனை நாடாளுமன்ற எம்.பி பிரியங்கா சதுர்வேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, கல்வியமைச்சர் தர்மேந்திர பிராதனை டேக் செய்து `இந்தியப் பாடத்திட்டத்தில் இப்படியொரு கருத்து இருப்பது நம் நாட்டுக்கும் நம் அரசியலமைப்புக்கும் அவமானம் தரக்கூடியதாகும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதுக்குறித்து கல்வித்துறை அமைச்சருக்கு அவர் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றும் வரதட்சனைக்கு ஆதரவான கருத்துகள் நீக்கப்படுவதோடு, வெளியீட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று அவர் உறுதியளித்துள்ளதாக எம்.பி பிரியங்கா சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.
இதுக்குறித்து சமூக செயற்பாட்டாளர் பலர், இந்த கருத்துகளை இந்தியப் பாடநூல் கமிட்டி அங்கீகரித்திருக்கிறது என்பதே நினைத்து பார்க்கும் போதே அதிர்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் வரதட்சனை குறித்து இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளை வாசிக்கும் போது மிகுந்த அவமானமாக இருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அழகற்ற பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் மிகுந்த அருவருப்பாக இருக்கிறது என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் வரதட்சணைக்கு எதிராகவும், புத்தகத்தின் ஆசிரியருக்குக் கண்டனம் தெரிவித்தும் பதிவிட்டுள்ளனர். சிலர் அந்த கருத்திற்கு ஆதரவாக பதிவுகளை போட்டுள்ளனர். வரதட்சனை என்பதே சமூகத்தில் இருந்து மட்டுமல்ல, மக்களின் மனங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும். பெண் பிள்ளைகளை வரதட்சனைக்காக வேண்டி படிப்பை பாதியில் நிறுத்தில் பணம் ஈட்ட வேலைக்கு விடும் அவலம் இன்னும் நாட்டில் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. எனவே வரதட்சனை ஒழிப்பு எனும் வாக்கியம் சட்டங்களில் இருந்தால் மட்டும் போதாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.