
டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை, வங்கிக்கணக்குடன் இணைக்காவிட்டால், தற்காலிகமாக முடக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இணைப்பதற்கான காலக்கெடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கவும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
மேலும், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதையும் கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ந் தேதியாக இருந்த நிலையில், 2018ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியாகமாற்றப்பட்டுள்ளது.
இதேபோல், வங்கிக்கணக்கு, பரஸ்பர நிதி மற்றும் காப்பீடுகளில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வரும் 31-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது எனவும் தகவல் வெளியாகியது.
டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காதவர்களின் கணக்கு தற்காலிகமாக முடக்கி வைக்கப்படும் எனவும் ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் மையத்தில் பதிவு செய்து, அந்த பதிவு எண்ணை வங்கியில் அளித்த பின், மீண்டும் வங்கிக்கணக்கு செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை, வங்கிக்கணக்குடன் இணைக்காவிட்டால், தற்காலிகமாக முடக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இணைப்பதற்கான காலக்கெடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.