
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 22 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
அதேசமயம், இந்த 50 நாட்களில் 26 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 20 ராணுவ வீரர்கள் பனிச் சறுக்கில் சிக்கியும், 6 பேர் தீவிரவாதிகள் தாக்குதலிலும் வீர மரணம் அடைந்தனர்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், “ 2017ம் ஆண்டு தொடங்கி கடந்த 50 நாட்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய 16 தேடுதல் வேட்டை, தாக்குதலில் இதுவரை 22 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ வீரர்கள் தரப்பில், காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பனிச்சரிவில் சிக்கி 20 வீரர்கள் பலியானார்கள். மேலும், பந்திபோரா மாவட்டம், ஹாஜின் பகுதியில் நடந்த தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் 3 வீரர்களும், குப்வாரா மாவட்டம், ஹன்ட்வாரா பகுதியல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ மேஜரும் , குல்கம் மாவட்டத்தில் 2 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர்.
உளவுத்துறை தகவல் படி, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட பின், ஏறக்குறைய 100 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு துப்பு கொடுக்கும் வகையில் செயல்பட்டு வந்தவர்கள், உதவி செய்பவர்கள் என 40-க்கும் ேமற்பட்டவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், அதன்பின், 6 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.