மே 7 வரை ஊரடங்கு நீடிக்கும்.. எந்தவிதமான தளர்வுமே கிடையாது.. தெலுங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Apr 19, 2020, 9:12 PM IST
Highlights

தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் எனவும், அதுவரை எந்தவிதமான தளர்வும் செய்யப்படாது என்றும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதுவரை 520 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதிகபட்சமாக மகாரஷ்டிராவில் 3600க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் தான் பாதிப்பு அதிகமாகவுள்ளது. டெல்லியில் 1893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை சீராக உயர்ந்தாலும், தீவிர சிகிச்சையின் மூலம் யாரும் உயிரிழக்காத வகையில், அதிகமானோரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர் தமிழ்நாட்டு மருத்துவர்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு போதவில்லையென்பதால், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஊரடங்கை போல அல்லாமல், இம்முறை சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்தமுறை சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர், தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள், ஊருக்கு வெளியே அமைந்துள்ள தொழிற்சாலைகள் ஆகியவை சரியான முன்னெச்சரிக்கையுடன் சமூக விலகலை கடைபிடித்து செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கும் தடையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 

எனவே ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு, எந்த மாதிரியான தளர்வுகளை செய்வது என்பது குறித்து அனைத்து மாநிலங்களும் ஆலோசித்துவருகின்றன.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மே 7ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், அதுவரை எந்தவிதமான தளர்வுக்கும் வாய்ப்பேயில்லை என்றும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

ஊரடங்கை ஏப்ரல் 14க்கு பிறகு நீட்டிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக முதல் குரல் கொடுத்ததே சந்திரசேகர் ராவ் தான். அம்மாநிலத்தில் 800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் தளர்வு கிடையாது என்றும் மே 7ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளார் சந்திரசேகர் ராவ்.
 

click me!