
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து சூர்யகாந்த் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பதவியேற்ற பிறகு சூர்யகாந்த், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இந்த குரூப் போட்டோவில் குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதிக்கு இடையே கெத்தாக அமர்ந்து இருந்தார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கும் ஆளுமைகளுடன் தமிழகத்தின் கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் என்ற பெரும் பதவியுடன் கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏவுகணை நாயகனுக்கு பிறகு...
கடந்த செப்டம்பர் மாதம் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியை வீழ்த்தி நாட்டின் உயரிய பதவியில் அமர்ந்தார். கடைசியாக 2002–2007 ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஏவுகணை நாயகன் அப்துல் காலம் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருந்தார்.
தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் சி.பி.ஆர்
இப்போது மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நாட்டின் அதிகாரமிக்க உயரிய பதவியில் தமிழர் ஒருவர் அமர்ந்து இருப்பது மீண்டும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும்விதமாக அமைந்துள்ளது. இதனால் தான் நாட்டின் அதிகார மையமான டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருடன் கெத்தாக ஒரு தமிழர் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை நெட்டிசன்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து தமிழகத்தின் பெருமையை பறைசாற்றி வருகின்றனர்.