கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் கொடுரமாக கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தின்போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவருக்குத் தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ஐந்து ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பு அளித்தது. ஏற்கெனவே சிறையில் ஒன்றரை ஆண்டை கழித்த நிலையில், எஞ்சிய மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனைக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் மீண்டும் சரண் அடைந்தார். புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைவாசத்தின்போது அவர் பலமுறை பரோல் விடுப்பில் அனுமதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நன்னடத்தைக் காரணமாக தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று மராட்டிய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தது. விடுதலையும் செய்யப்பட்டார். எட்டு மாதங்கள் அவரது தண்டனை காலம் இருந்தபோதும், அவருக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டது.
இதனையடுத்து சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு பல்வெறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது, புனேவை சேர்ந்த பிரதீப் பாலேகர் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில் எந்த அடிப்படையில் சஞ்சய் தத்துக்கு விடுதலை வழங்கப்பட்டது. சஞ்சய் தத்தின் நல்ல நடத்தையை அதிகாரிகள் எப்படி மதிப்பிட்டனர்? சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டதில் பின்பற்றப்பட்ட நடைமுறை தொடர்பாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மராட்டிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
‘சிறைத்துறை டி.ஐ.ஜி-யிடம் ஆலோசிக்கப்பட்டதா அல்லது சிறை கண்காணிப்பாளர் நேரடியாக கவர்னருக்குப் பரிந்துரையை வழங்கினாரா? எப்படி அதிகாரிகள் சஞ்சய் தத்தின் நன்னடத்தையை மதிப்பிட்டார்கள்? பாதி காலம் பரோலில் சென்ற சஞ்சய் தத்தின் நன்னடத்தையை அதிகாரிகள் மதிப்பிட்டது எப்போது?’ என மராட்டிய மாநில அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், நேற்று மராட்டிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் பிரஜக்தா ஷிண்டே, இந்த வழக்கில் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஷுதோஷ் கும்பகோனி ஆஜராக இருப்பதால் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.