நிறைவடைந்தது மகர விளக்கு காலம்..! 66 நாட்களுக்கு பிறகு அடைக்கப்பட்டது சபரிமலை நடை..!

By Manikandan S R SFirst Published Jan 21, 2020, 5:53 PM IST
Highlights

இன்று காலையில் பந்தள அரண்மனையின் ராஜ பிரதிநிதி சன்னிதானத்தில் தரிசனம் செய்தார். அதன்பிறகு நடை அடைக்கப்பட்டு சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாபரணங்களும் மீண்டும் பந்தள அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பதினெட்டாம் படி வழியாக கீழிறங்கி வந்த ராஜ பிரதிநிதி அடுத்த மாத பூஜைகளுக்காக மீண்டும் சாவியை மேல்சாந்தியிடம் ஒப்படைத்தார்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். விஷு, மகர சங்கராந்தி, கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் கோவில் நடை திறக்கப்படும். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சபரிமலை நடைதிறக்கப்பட்டது.

டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற மண்டல பூஜைக்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் நடைபெறும் மிகமுக்கிய நிகழ்வான மகர ஜோதி திருநாள் 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணங்கள் சுவாமி அய்யப்பன் விக்ரகத்திற்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது பொன்னம்பல மேட்டில் தோன்றிய மகர ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மகர விளக்கு பூஜை நிறைவடைந்து பிறகு கடந்த 5 நாட்களும் தினமும் படிபூஜையும் குருதி பூஜையும் நடைபெற்றது. நேற்று இரவுடன் பக்தர்களின் தரிசனம் நிறைவு பெற்றது. இன்று காலையில் பந்தள அரண்மனையின் ராஜ பிரதிநிதி சன்னிதானத்தில் தரிசனம் செய்தார். அதன்பிறகு நடை அடைக்கப்பட்டு சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாபரணங்களும் மீண்டும் பந்தள அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பதினெட்டாம் படி வழியாக கீழிறங்கி வந்த ராஜ பிரதிநிதி அடுத்த மாத பூஜைகளுக்காக மீண்டும் சாவியை மேல்சாந்தியிடம் ஒப்படைத்தார்.

மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் சபரிமலை நடை மீண்டும் திறக்கப்படும்.

Also Read: ஒரே நாளில் இருமுறை ஹரிவராசனம்..! சபரிமலையில் நடந்த அபூர்வ நிகழ்வு..!

click me!