மியான்மரில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் வரும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் சட்ட விரோதமானவர்கள். அவர்களை தொடர்ந்து தங்கவைப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். இவர்களை நாடுகடத்தும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தாக்குதல்
மியான்மர் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் ரோஹிங்கியா மாநிலத்தில் உள்ள ரோஹிங்கியாபழங்குடியின முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அகதிகளாக
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ரோஹிங்கியா அகதிகளாக வங்காளதேசம், இந்தியா எல்லைப்பகுதிக்குள் சட்டவிரோதமாக அகதிகளாக வந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின்ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளுக்குள் வந்து சேர்கின்றனர்.
மத்திய அரசு நிலைப்பாடு
இவர்களை நாட்டு திருப்பி அனுப்புவதிலும், தொடர்ந்து தங்க வைக்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், மியான்மர் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தது.
பொதுநல மனு
இதையடுத்து, ரோஹிங்கியா அகதிகளாக இந்தியாவில் குடியிருக்கும் முகமது சலிமுல்லா, முகமது சாகிர் ஆகியோர், ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையத்தின் படி இந்தியா, ரோஹிங்கியாஅகதிகளை ஏற்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வாலிகர், டி.ஓய் .சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனர் துஷார் மேத்தா அரசின் சார்பில் பிரமாணப் பத்தரத்தை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
குடிமக்களுக்கு உரிமை
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19ன்படி, நாட்டின் எந்த பகுதியில் சென்று வாழும் அடிப்படை உரிமை, சுதந்திரமாக செல்லும் உரிமை ஆகியவை குடிமக்களுக்கு மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது. சட்டவிரோதமாக நாட்டுக்குள் வரும் அகதிகள் இந்த உரிமையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த அடிப்படை உரிமையை நீதிமன்றம் மூலம் கோர முடியாது.
தீவிரவாதிகளுடன் தொடர்பு
ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் என்பவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடனும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இயக்கத்துடனும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களை நாட்டின் எந்த நகரிலும் தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிக்க முடியாது. இவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு தீவிரமான அச்சுறுத்தல் இருக்கிறது.
தலையிடக்கூடாது
இப்போது வரை, நாட்டில் சட்டவிரோதமாக வந்த ரோஹின்கியா அகதிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. சில ரேஹின்கியா முஸ்லிம்கள் போலி அடையாள அட்டை மூலம், சட்டவிரோதமாக ஹவலா பணத்தை இங்கு கொண்டு வருகிறார்கள், ஆள் கடத்தலிலும் ஈடுபடுகிறார்கள். ஆதலால், ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடுகடத்தும் மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளால் என்னவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்பது குறித்து, உளவுத்துறை மூலம் திரட்டப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 3-ந்தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.