
வாடிக்கையாளளுக்கு தடையற்ற சேவை வழங்க ஒத்துழைக்க தவறும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது நாள்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ட்ராய் எச்சரித்துள்ளது.
தொழில்போட்டி காரணமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தொழில்போட்டி காரணமாக, ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு மற்ற நிறுவனம் உரிய சேவை வழங்குவதில்லை என்ற புகார் உள்ளது. அதாவது டெல்லியில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர், சென்னையில் உள்ள ஜியோ வாடிக்கையாளரை தொடர்புகொள்ள விரும்பினால், இரண்டு அம்சங்கள் சரியாக இருந்தால் மட்டுமே அவரால் சிறந்த சேவையைப் பெற முடியும். இருவரும் சரியான நெட்வொர்க் இணைப்பில் இருப்பது அசியசம், இரு நிறுவனங்களும் உரிய முறையில் அவர்களுக்கு இன்டர்கனெக்சன் வசதியை வழங்க வேண்டும். இவ்வாறு இருக்கும்போது வாடிக்கையாளர்கள், தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படாது.
ஆனால், தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனங்கள், மற்ற நிறுவனத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றன. தொழில்போட்டியால் இந்த சேவை சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்து வருகிறது.
மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனக்கு இண்டர்கனெக்சன் சேவையை வழங்க மறுத்து வருவதாக ஜியோ நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. அதேபோல், மற்ற நெட்வொர்க் நிறுனங்களும் ஜியோ மீது புகார் தெரிவித்துள்ளன. அதாவது ஜியோ நிறுவனம் இலவச சேவை வழங்கியதால் அளவில்லாத தொலைப்பேசி அழைப்புகள் வருவதால், நெட்வொர்க் போதுமான அளவு இல்லை என்று புகார் கூறுகின்றன.
இந்த நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்டர்கனெக்சன் வழங்குவதற்கான காலக்கெடுவை 90 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைத்துள்ளது. அதாவது ஒரு நிறுவனத்தின் கோரிக்கையை மற்றொரு நிறுவனம் பரிசீலித்து 30 நாட்களுக்கு தேவையான வசதியை செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளது. இது தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்றும் ட்ராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.