"மத்திய அரசின் முடிவு ராணுவ வீரர்களை வேதனைப்படுத்தியுள்ளது" - மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்காந்தி

Asianet News Tamil  
Published : Oct 31, 2016, 05:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
"மத்திய அரசின் முடிவு ராணுவ வீரர்களை வேதனைப்படுத்தியுள்ளது" - மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்காந்தி

சுருக்கம்

மத்திய அரசு கடந்த சில வாரங்களாக எடுத்த முடிவுகள் ராணுவ வீரர்களை தார்மீக ரீதியாக பெரிதும் வேதனைப்படுத்தி, அவர்களை புண்படச் செய்துள்ளது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் , ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமா என்பது குறித்து ஆராய, பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நரசிம்மா ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் , கடந்த புதன் கிழமை அன்று தனது அறிக்கையை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில், தீபாவளி தினமான நேற்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது

மத்திய அரசு கடந்த சில வாரங்களாக எடுத்த முடிவுகள் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை பினையம் வைத்து நமது நாட்டை காத்து வருகிறார்கள். ராணுவ வீரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாப்பதும், அக்கறையாக இருப்பதும் நமது கடமை,  இதை மத்திய அரசு வார்த்தைகளில் மட்டும் சொல்லக்கூடாது செயலிலும் காட்ட வேண்டும்.

தீபாவளி கொண்டாடும் இந்த இனி நல்ல நாளில், இருளை விரட்டி ஒளி ஏற்றும் புனித திருநாளில்,  நமது எல்லையைக் காக்கும் வீரர்களுக்கு நன்றியை நாம் வார்த்தைகளில் உண்மையாக வெளிப்படுத்த வேண்டும்.  

சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்ட சில நாட்களில் பணியில் ஊனம் ஏற்பட்ட நமது வீரர்களின் ஓய்வூதிய திட்டத்தில் பல படிநிலைகளை மத்திய அரசு கொண்டுள்ளது. இதனால், பல ராணுவ வீரர்கள் தாங்கள் பெற்றுக்கொண்டு இருக்கும் ஓய்வூதியத்தைவிட குறைவான தொகை பெறுவார்கள்.

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதால் நமது ராணுவ வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும்  இடையிலான ஊதிய வேறுபாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும், ராணுவ அதிகாரிகள் பலரின் தகுதிநிலையை மத்திய அரசு குறைத்து அறிவித்துள்ளதாக கடந்த 18-ந்தேதி வெளியான அறிவிப்பின் மூலம் அறிந்தேன்.

ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் நமது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் உண்மையான கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இதனால், அவர்கள் தங்கள் சலுகைகளையும், உரிமைகளையும் பெற வீதிகளுக்கு வந்துபோராடி, குரல் எழுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அர்த்தமுள்ள ஜனநாயகத்தில் நாட்டின் நலனுக்காக உயிரை பினையம் வைக்கும் வீரர்களுக்கு, 125 கோடி மக்களின் அன்பையும், ஆதரவையும் , நன்றியுனர்வையும் தெரிவிக்கும் வகையில் நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஆதலால், நமது வீரர்கள், ஓய்வூதியம், இழப்பீடு, ஊனமுற்ற வீரர்களின் ஓய்வூதியம் ஆகியவை, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக வழங்கப்பட உங்களை நான் வலியுறுத்துகிறேன்.

ஒருபதவி, ஒரு ஓய்வூதியம் திட்டத்தை அர்த்தமுள்ள வகையில் அமல்படுத்தி,  7-வது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகள் விரைவாகக் களைந்து நமது வீரர்களின் மனதை திருப்திபடுத்த வேண்டும். இது ஒன்றுதான் நமது வீரர்களுக்கும் நாம் செய்யும் குறைந்தபட்ச நன்றியுனர்வாகும். ராணுவ வீரர்கள் தங்களின் சலுகைகளைப் பெற வீதியில் இறங்கி போராடக்கூடாது.

நாம் தீபாவளியை கொண்டாடும் இந்த தருணத்தில், இதுபோன்ற அறிவிப்புகள் நமது ராணுவ வீரர்களுக்கான நன்றியுணர்வை வார்த்தையிலும், செயலிலும் காட்டுவதாக அமையும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Kisan Credit Card 2026: நிலமில்லா விவசாயிகளுக்கு 4% வட்டியில் கடன் – விண்ணப்பிப்பது எப்படி?
Blood River: தண்ணி இல்ல, ரத்தம் ஓடுற ஆறு நம்ம நாட்டுல எங்க இருக்கு தெரியுமா?