
கேரளா தொழிலதிபரான முகமது நிஷாம் என்பவர் பீடி தொழில் செய்து வருகிறார். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள ஆயுள் கைதியான முகமது நிஷாம், கடந்த ஜனவரி மாதம் முதல் சிறையில் உள்ளார். கண்ணூர் சிறையில் உள்ள அவருக்கு வி.ஐ.பி. அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முகமது நிஷாம் மீது, காவல் துறையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்களே அளித்துள்ள இந்த புகாரில், தொழிலதிபர் முகமது நிஷாம், சிறையில் இருந்து கொண்டே வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளனர்.
சிறையில் உள்ள முகமது நிஷாமுக்கு, இரண்டு செல்போன்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செல்போன் மூலம், அவர் வழக்கம்போல் வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காவல் துறையின் பாதுகாப்பிலேயே அவர் இதை செய்து வருவதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முகமது நிஷாம் மீதான புகார் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் மீதான புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆயுள் தண்டனை கைதியான முகமது நிஷாம் மீது, மேலும் 24 ஆண்டுகள் தண்டனை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்பதும், இவர் முது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.