மருத்துவமனை அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு… மருத்துவ ஊழியர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

By Narendran SFirst Published Nov 4, 2022, 7:24 PM IST
Highlights

கர்நாடகாவில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் 3 செவிலியர்கள் மற்றும் ஒரு மருத்துவரை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடகாவில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் 3 செவிலியர்கள் மற்றும் ஒரு மருத்துவரை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் தும்கூரில் தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கூலித் தொழிலாளி பெண் இரட்டை குழந்தைகளை தனது வயிற்றில் சுமந்து வந்தார். இந்த நிலையில் அவர் பிரச்சவத்திற்காக தும்கூரில் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் மருத்துவமனை ஊழியர்கள் ஆதார் அட்டை அல்லது கர்ப்பமாக இருக்கும் போது வழங்கப்படும் தாய் அட்டை கேட்டுள்ளனர். அது இல்லாததால், மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 1.3 லட்சத்தை இழந்த 76 வயது மூதாட்டி… ஏ.டி.எம் கார்டை மாற்றிக்கொடுத்து மோசடி செய்த மர்ம நபர்!!

மேலும் அவரை பெங்களூரு மருத்துவமனைக்கு செல்லும் படி பரிந்துரைத்துள்ளனர். ஆனால் அந்தப் பெண்ணால் பெங்களூரு செல்ல ஆம்புலன்ஸுக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாததால், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இரவு வீடு திரும்பிய அவருக்கு மறுநாள் காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆண் குழந்தை பிறந்த பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சில நிமிடங்களிலேயே பிறந்த குழந்தையும் இறந்தது. இந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் கே.சுதாகர், தும்கூரில் கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு பிறந்த குழந்தைகளின் துரதிர்ஷ்டவசமான இறப்பால் நான் மிகவும் வேதனையடைந்தேன்.

இதையும் படிங்க: சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்.. மாற்று வழி இதுதான் ! தேவசம்போர்டு அறிவிப்பு

நேற்றிரவு மருத்துவமனைக்குச் சென்று அதிர்ச்சியளிக்கும் இந்த செய்தியை அறிந்த பிறகு இந்த விவகாரத்தில் விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிட்டேன். மகப்பேறு வார்டுக்கு பொறுப்பான மூன்று செவிலியர்கள் மற்றும் பணியில் இருந்த ஒரு மருத்துவர் ஆகியோரை உடனடியாக இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அவசர காலங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் தலையாய கடமை. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆவணங்களை ஒருபோதும் வலியுறுத்தக்கூடாது. இது குறித்து பல உத்தரவுகள் மூலம் மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடக்காமல் இருக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!