
அண்மையில் ராகுல் காந்தி பெங்களூருக்கு வந்து, அம்மா கேண்டீன் அம்மா கேண்டீன் என்று உச்சரித்து விளம்பரப்படுத்தித் திறந்து வைத்த இந்திரா கேண்டீன் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்திரா கேண்டீன்களில் மலிவு விலையில் உணவு வழங்கப்படும் என்றும், பெங்களூரு நகரில் எவர் ஒருவரும் இனி பசியுடன் செல்ல தேவையில்லை என்றும் பேசினார் ராகுல் காந்தி. ஆனால், இந்திரா கேண்டீன் துவங்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், அதன் பராமரிப்பு குறித்து பொது மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சுத்தம் சுகாதாரம் என்று இருப்பிடங்களை வைத்துக் கொள்வது குறித்து பாடம் எடுக்கும் அரசு, இந்திரா கேண்டீன் நடத்தப் படும் விதம் குறித்துப் போய்ப் பார்த்தால் அதை நிறுத்திக் கொள்ளும் என்கிறார்கள் நெட்டிசன்கள். வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் இருந்து மேலும் 97 இந்திரா கேண்டீன்கள் துவங்கப்படும் என்று மாநில முதல்வர் சித்தராமையா கூறியிருக்கிறார். ஆனால், இந்திரா கேண்டீனில் சாப்பிடும் ஏழை எளியவர்களின் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கை எதிர்காலத்துக்கும் உத்தரவாதமில்லை என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள் அதனைப் பார்வையிடுபவர்கள்.
மோசமான தண்ணீரில் சமைக்கப்படுவதும், உணவு உண்ணும் தட்டு முதலிய பாத்திரங்களை அழுக்கு படிந்த சுகாதாரமற்ற முறையில் வைத்திருப்பதும் பராமரிப்பதும், சமைக்க எடுத்துக் கொள்ளும் தண்ணீர் மாசடைந்ததாக இருப்பதும் என பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது இந்திரா கேண்டீன். பொதுமக்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்று பொங்குகின்றனர் நெட்டிசன்கள்.
உணவை விநியோகிக்கும் போது கையுறைகளையும், தலைஉறைகளையும் அணிந்து கொண்டு மேலோட்டமாக சுகாதாரமாக இருப்பது போல் காட்டினால் மட்டும் போதாது, உணவுப் பொருள்களும் தூய்மையான, சுகாதாரமான சூழலில் தயாரிக்கப்பட வேண்டும், அதன் பின்னர் ராகுல் கூறியது போல், பெங்களூரில் உள்ள ஒவ்வொரு சிட்டியிலும் இந்திரா கேண்டீன்களைத் திறப்பதற்கு முயற்சி செய்யலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.