தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் போராட்டம் ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுததி தமிழகம் முழுவதும் போராட்டம்
நடத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்க விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இது குறித்து இன்று விளக்கமளித்த உச்சநீரிமம்னறம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீரிமன்றம் நிராகரித்துள்ளது. அதாவது, மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று தமிழக அரசு அந்த மனுவில் கூறியிருந்தது. இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது. காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த நிலையில் வரும் 9 ஆம் தேதி தமிழக அரசின் மனுவுடன் மத்திய அரசின் மனுவும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி வேற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழகத்தில் போராட்டங்களை கைவிட்டுவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று அப்போது அவர் அறிவுறுத்தினார். ஏப்ரல் 9 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் போராட்டம் ஏன்? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தமிழக மக்கள் போராட்டத்தைக் கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்போது வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து தமிழக அரசிடம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுரையை தெரிவிப்பதாக வழக்கறிஞர் உமாபதி உறுதி கூறினார்.