
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் விமானங்கள் இயக்குவது இன்று கடைசி கட்டத்தை எட்டியுள்ளது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று 11வது நாளாக தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது. தற்போது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதனிடையே கடுமையான போர் சூழல் காரணமாக உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைன் வான்வெளியும் தடை செய்யப்பட்டிருப்பதால் அபரேஷன் கங்கா திட்டம் மூலம், அங்குள்ள இந்தியர்களை தரை வழியாக அண்டை நாடுகளான உர்மேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வருகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய விமான சேவை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை தவிர இந்திய விமானப்படையும் இந்த மீட்பு பணியில் இணைந்துள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியானோரை அழைத்து வர ஏதுவாக விமானப்படையின் சி-17 ரக விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் விமானங்கள் இயக்குவது இன்று கடைசி கட்டத்தை எட்டியுள்ளது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தங்களுடைய சொந்த விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் விரைவில் இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் தொலைப்பேசி எண் மற்றும் இருப்பிட தகவலோடு இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் தங்கியுள்ள மாணவர்கள் அவசரகால அடிப்படையில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பிறகு ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதன் எதிரொலியாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.