
கோவில் சிலையை சேதப்படுத்திட்டாங்க…ரூ ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு ‘கடவுள் அனுமன்’ மனு
கல்குவாரி சரிந்து புராதன கோவிலில் உள்ள சிலைகள் சேதம் அடைந்ததையடுத்து, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ‘கடவுள் அனுமன்’; தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
கல்குவாரி
மத்தியப் பிரதேசம் குணா பகுதியில் உள்ள பிப்ருடா ஹர்ட் பகுதியில் புராதன அனுமன் கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கல்குவாரி ஒன்று சுமார் 25 வருடங்களாக இயங்கி வருகிறது.
இந்த கல்குவாரியில் பாறைகளை வெடிமருந்து வைத்து தகர்ப்பது வழக்கம். அப்போது சில கல் துண்டுகள் பாறைகள் அருகாமையில் உள்ள கோவிலில் வந்து விழுவது வழக்கம்.
சிலைகள் சேதம்
இதன் காரணமாக அந்த கோவிலில் உள்ள புராதன சிலைகள் சேதம் அடைந்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தேவேந்திர பார்கவா என்பவர் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளார்.
இந்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து போபாலில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மத்திய மண்டல கிளையில் மனு ஒன்றை அளித்து உள்ளார்.
வழக்கு
அந்த மனுவை கடவுள் அனுமான் பெயரில் அளித்து உள்ளார். அந்த மனுவில் கோவில் சிலைகளை சேதப்படுத்திய கல்குவாரி நிர்வாகம், கோவிலை புனரமைக்க ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
இந்த மனு குறித்து கூறும்போது, குணா மாவட்ட கலெக்டர் ராஜேஷ் குமார் ஜெயின் ஆச்சர்யம் தெரிவித்தார். மேலும் இதுசம்மந்தபட்ட ஆவணங்கள் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.