
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி புறக்கணித்துள்ளது. இந்நிலையில் மத்திய பாஜக அரசை சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் நாட்டில் ஆட்சி செய்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர் என விமர்சனம் செய்துள்ளது. ஆனால் அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு பதிலாக மனிதர்களை கொன்று வருகின்றனர்.
தேர்தலில் வெற்றி ஆட்சியில் நீடிப்பதும் ஜனநாயகம் அல்ல. பெரும்பான்மை என்பது எப்போதும் நிரந்தரமல்ல. நாட்டு மக்களே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு வெற்றியில் சந்தேகம் இருந்தால் பெரும்பான்மை பற்றி பேசக்கூடாது. பணம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தல் ஆகியவற்றின் மூலம் வெற்றி அடைவது வெற்றியாகாது என கடுமையாக சாடியுள்ளது.