உத்தரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் பண்டிகைக்கு மனைவி புத்தாடை வாங்கி தராததால் சிறையில் இருக்கும் கணவர் முத்தலாக் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்கு சென்று அவ்வப்போது அவர் மனைவி அவரை பார்த்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் பக்ரீத் பண்டிகை வந்திருக்கிறது. அதற்காக சிறையில் இருக்கும் தனக்கு புத்தாடை வாங்கி தருமாறு கணவர் கூறியிருக்கிறார். ஆனால் பானு புத்தாடை வாங்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அவர் கணவர் சிறையில் இருந்தவாறே தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து பானு காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறையில் இருக்கும் நபர் மீது புதிய முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இஸ்லாமிய பெண்களின் திருமணத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய முத்தலாக் தடை சட்டத்திற்கு பிறகு பதிவு செய்யப்படும் 8 வது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.