பிரதமர் மோடியை அவமதித்த மம்தா பானர்ஜி... மே.வங்க தலைமைச் செயலாளரை டெல்லிக்கு தூக்கியடித்த மத்திய அரசு..!

By Asianet TamilFirst Published May 29, 2021, 9:47 PM IST
Highlights

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்த நிலையில், அம்மாநில தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபத்யாய் டெல்லி பணிக்கு மாற்றி மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 
 

யாஸ் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டிருந்தார். முதலில் ஒடிசாவில் பயணம் மேற்கொண்ட மோடி, பின்னர் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் பிரதமர் மோடி மேற்குவங்காளம் சென்றார். புயல் பாதிப்புகளை விமானம் மூலம் மோடி பார்வையிட்டார்.
பின்னர் ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட அதிகாரிகள் பங்குபெறுவதாக இருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியும் அழைக்கப்பட்டிருந்தார். இதனால் மம்தா பானர்ஜி அதிருப்தி அடைந்தார். பிரதமர் மோடி பங்கேற்ற அக்கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாகவே மம்தா பானர்ஜி வந்தார். முதல்வரின் வருகைக்காக பிரதமர் மோடி, ஆளுநர் ஜெகதீப் தங்கர் ஆகியோர் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.


மம்தா மட்டுமல்ல, மேற்குவங்க மாநில அதிகாரிகளும் தாமதமாகவே கூட்டத்துக்கு வந்தனர். மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்காத மம்தா பானர்ஜி கூட்டத்தில், பிரதமரை தனியாக 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார். முதல்வர் மம்தாவின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. மம்தா பானர்ஜிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபத்யாவை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அவரை தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவித்து டெல்லியில் உள்ள பணியாளர் மற்றும் பயற்சித் துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மத்திய மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இடையே மீண்டும் கடும் உரசல் ஏற்பட்டுள்ளது.

click me!