மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு... பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த சிவசேனா... அதிர்ச்சியில் காங்கிரஸ்..!

By vinoth kumarFirst Published Dec 10, 2019, 3:34 PM IST
Highlights

குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 17 சிவசேனா எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 17 சிவசேனா எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை, இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக காட்டியது.

இந்நிலையில், நேற்று மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என அமித்ஷா விளக்கமளித்தார். ஆனால் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, மசோதா மீது 9 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பின் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் பதிவாகின. இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்ராவில் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்த நிலையில் காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக சிவசேனா ஆதரவு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மசோதாவுக்கு எதிராகவோ அல்லது வாக்களிப்பதை தவிர்க்கவோ சிவசேனாவிடம் காங்கிரஸ் கூறியிருந்ததது. ஆனால், கூறியதற்கு மாறாக மக்களவையில் பாஜகவுக்கு ஆதரவாக 17 சிவசேனா எம்.பி.க்கள் வாக்களித்ததால் காங்கிரஸ் தலைமையை அதிருப்தி அடைய செய்துள்ளது. இதனிடையே, மாநிலங்களவையிலாவது மசோதாவுக்கு எதிராக சிவசேனா தனது நிலைப்பாட்டை எடுக்க காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், குடியுரிமை மசோதாவில் உரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் ஆதரவு இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடியாக அறிவித்துள்ளார். மக்களவையில் சிவசேனா நிலைப்பாடுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

click me!