2 primary school students infected by noro virus in kerala பொதுவாக நோரோவைரஸ் பாதிப்பு ஏற்பட்டவரிடம் இருந்து பல லட்சம் நோரோவைரஸ் கிறுமிகள் மற்றவர்களுக்கு பரவும்.
கேரளா மாநிலத்தில் இரண்டு பேருக்கு நோரோவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்ப இருப்பதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கேரளா மாநிலம் திருவணந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களுக்கு நோரோவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நோரோவைரஸ் பாதிப்பு பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தற்போது நோரோவைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் இரண்டு சிறுவர்களின் உடல்நிலையும் சீராகவே உள்ளது என தெரிவித்து இருக்கிறார். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
உடல் பரிசோதனை:
இதை அடுத்து மாணவர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சேம்பில்கள் மாநில பொது சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தான் இரண்டு மாணவர்களுக்கு நோவோவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மேலும் சிலரிடம் இருந்து சேம்பில்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு செய்யப்பட்டது.
“விழிஞ்சம் பகுதியில் இரண்டு பேருக்கு நோரோவைரஸ் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கவலை கொள்ள வேண்டாம். சுகாதாரத் துறை நிலைமையை கண்கானித்து வருகிறது. பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேம்பில்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு மாணவர்களின் உடல்நிலையும் சீராகவே உள்ளது,” என்று சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் கேரளா மாநிலத்தில் முதல் முறையாக நோரோவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அப்போது கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு நோரோவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அரசு சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை அடுத்து நோரோவைரஸ் பரவாமலேயே இருந்தது.
நோரோவைரஸ் பாதிப்புகள்:
நோரோவைரஸ் பாதிப்பு நாம் உண்ணும் உணவு வழியே பரவுகிறது. இது தவிர நோரோவைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளை தொடுதல், பாதிக்கப்பட்ட பொருட்களை தொடுதல் அல்லது, நோரோவைரஸ் பாதிப்பு உள்ளவருடன் நெருக்கம் காட்டுதல் போன்ற காரணங்களாலும் நோரோவைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம் தான். நோரோவைரஸ் பாதிப்பு உள்ளவரிடம் இருந்து பல லட்சம் நோரோவைரஸ் கிறுமிகள் பரவும். இவை அவர்கள் தொடும் பகுதிகள், சுவாசம் உள்ளிட்டவைகளாலேயே பரவும்.
இந்த கிறுமிகள் பலரின் உடல்நிலையை மிகவும் மோசமாக்கி விடும். குமட்டல், வாந்தி, அடிவயிற்று பகுதியில் வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளை கொண்டுள்ளது. இந்த அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தென்படும். நோரோவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, குணம் அடைந்தவர்களிடம் இருந்து அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு நோரோவைரஸ் மற்றவர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.