பதவியேற்றதும் ஜனாதிபதி ராம்நாத்துக்கு முதல் மனுவை அனுப்பிய கர்ணன்!!

First Published Jul 25, 2017, 4:34 PM IST
Highlights
karnan petition to president ram nath


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன், தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி, புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு முதல் மனுவை அனுப்பி உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது. கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஜூன் 11-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.

இதற்கிடையே கர்ணனின் செல்போனின் அழைப்புகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அவர் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார் ஜூன் 20-ம் தேதி அவரை கைது செய்தனர். இதையடுத்து கர்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஜனாதிபதி பிரணாப்பிடம், மனு தாக்கல் செய்தார் ஆனால் அந்த மனு  பரிசீலிக்கப்படவில்லை.

இந்நிலையில், புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அலுவலக பொறுப்பை ஏற்றவுடன் தனது கோரிக்கையை முதல் மனுவாக அனுப்ப முன்னாள் நீதிபதி கர்ணன் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் மாத்யூஸ் ஜே. நெடும்பராகூறுகையில், “ புதிய ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவி ஏற்றவுடன், முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி ேநரடியாகவும், மின்னணு முறையிலும் முதல் மனுவை அனுப்பி இருக்கிறோம். இதற்கான மனு தயாரிக்கும் பணி நேற்று முன் தினம் முடித்தோம்’’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மேற்கு வங்காள ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் தன்னை பரோலில் விடுவிக்கும் படி முன்னாள் நீதிபதி கர்ணன் மனு அனுப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!