பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் - “ஆதாரம் இருக்கிறது: நடவடிக்கை எடுங்கள்” என எச்சரிக்கை

First Published May 3, 2017, 5:34 PM IST
Highlights
india warning pakistan ambassador


இந்திய ராணுவ வீரர்கள் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு, பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை இன்று தெரிவித்தது.

கடந்த 1ம் தேதி ஜம்மூ காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியை ஒட்டிய எல்லைப் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் இந்தியவீரர்கள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது இந்திய வீரர்கள் நயீப் சுபீதர் பரம்ஜீத் சிங் மற்றும் பிரேம் சிங் ஆகியோரை கொன்று,  தலையை வெட்டிஎடுத்தனர். இந்த தாக்குதலுக்கு பதலடி கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் வரக்கூறி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை ஏற்று சென்ற பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம், பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதநேயமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், உரியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் இந்தியஅ ரசு சார்பில்வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்தூல் பசீத்தை அழைத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானற்ற செயலுக்கு இந்தியாவின் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. “ காஷ்மீரின் கிருஷ்ணகாட் பகுதியில் எந்தவிதமான போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி தாக்குதல் நடத்தவில்லை. இந்தியா கூறுவதைப் போல் எந்த வீரர்களையும் தலையையும் வெட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் அறிக்கையை மறுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே கூறுகையில், “ இந்திய எல்லைக்குள் புகுந்து அத்துமீறி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தான் தாக்குதல் நடத்தியது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமான ராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கையாகும்” எனத் தெரிவித்தார்.

click me!