வருமான வரி உச்ச வரம்பு உயர்வு! கடைசி நேரத்தில் மோடி வீசிய பிரம்மாஸ்திரம்!

By Asianet TamilFirst Published Feb 2, 2019, 11:41 AM IST
Highlights

தனி நபர் வருமான வரி உச்ச வரம்பை 5 லட்ச ரூபாயாக உயத்தும் முடிவை மத்திய அரசு கடைசி நேரத்தில் எடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

தனி நபர் வருமான வரி உச்ச வரம்பை 5 லட்ச ரூபாயாக உயத்தும் முடிவை மத்திய அரசு கடைசி நேரத்தில் எடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் மத்திய பட்ஜெட்டின்போது தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்று மாத சம்பளக்காரர்கள் எதிர்ப்பார்ப்பது வாடிக்கை. மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும் தேர்தல் நெருங்கிவருவதாலும் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்ற கருத்து பரவலாக இருந்தது. எதிர்பார்த்ததுபோலவே பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு இரண்டரை லட்ச ரூபாயிலிருந்து ஐந்து லட்சமாக அதிரடியாக உயர்த்தப்பட்டது. தற்காலிக நிதி அமைச்சர் பியூஸ் கோயல்,  ஆளுங்கட்சியினரின் பலத்த வரவேற்புக்கு இடையே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால், நிதி அமைச்சர் கோயல் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய சற்று நேரத்தில் எல்லாம் வருமான வரி உச்ச வரம்பிம் மாற்றம் இல்லை என்றே செய்தித் தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்தன. இந்தச் செய்தியை நம்பி பலரும் சமூக ஊடகங்களில் புலம்பவும் செய்தார்கள். ஆனால், பட்ஜெட் உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக வருமான வரி உச்ச வரம்பை நிதியமைச்சர் உயர்த்தி பட்ஜெட்டில் வாசித்தார். இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால், வருமாவ வரி உச்ச வரம்பு அறிவிப்பை சப்ளிமெண்ட் பகுதியில்தான் நிதியமைச்சர் கோயல் வாசித்தார். இதன்மூலம் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்தும் முடிவு கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவு என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த முடிவை முன்கூட்டியே நிதி அமைச்சகம் எடுத்திருந்தால், அது பட்ஜெட் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும். அப்படி ஒரு முடிவு எதுவும் முன்கூட்டியே எடுக்கப்படாததால்தான், தொடக்கத்தில் அந்த அறிவிப்பை பட்ஜெட் வாசிக்கும்போது பியூஸ் கோயலால் வெளியிட முடியவில்லை.  கடந்த ஒரு வாரத்துக்குள்ளாகத்தான் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மோடி அறிவுறுத்தலின் பேரில்தான் இந்த முடிவை கடைசி நேரத்தில் பட்ஜெட்டில் நிதியமைச்சகம் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. 

தேர்தலை மனதில் வைத்துதான் இடைக்கால பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை கடைசி நேரத்தில் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகி இருக்கிறது.
 
 

click me!