என்னடா ஆட்டு குட்டிய தூக்கிட்டு போறமாதிரி போறீங்க? முதலையை பைக்கில் தூக்கி சென்ற இளைஞர்கள்

Published : Sep 01, 2024, 04:35 PM IST
என்னடா ஆட்டு குட்டிய தூக்கிட்டு போறமாதிரி போறீங்க? முதலையை பைக்கில் தூக்கி சென்ற இளைஞர்கள்

சுருக்கம்

குஜராத்தில் கனமழையால் அடித்து வரப்பட்டு குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த முதலையை இளைஞர்கள் மீட்டு இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை நான்கே நாட்களில் கொட்டித் தீர்த்ததால், அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், நீரில் அடித்து வரப்பட்ட முதலைகள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளன. முதலைகள் நடமாட்டத்தால் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். அந்த வகையில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த முதலையை மக்கள் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அதை இருசக்கர வாகனத்தில் வைத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த பரபரப்பான வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வதோதராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு மொத்தம் 40க்கும் மேற்பட்ட முதலைகள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்ததும், வதோதராவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத்துறையினரின் உதவியுடன் உள்ளாட்சி அமைப்புகள் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளன. முதலில் காட்டு விலங்குகள் மற்றும் மனித மோதலைத் தடுக்க, குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்த முதலைகள் முதலில் மீட்கப்படுகின்றன.

Fastest Train In India : இந்தியாவின் மிக வேகமான ரயில் எது தெரியுமா?

இந்த மீட்புப் பணியின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. முதலையை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. முன்னால் அமர்ந்திருப்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்திருப்பவர் முதலையை இருசக்கர வாகனத்தின் நடுவில் படுக்க வைத்து எடுத்துச் சென்றனர். இதனிடையே முதலையை தூக்கிச் சென்ற இளைஞர்கள் சந்தீப் தாக்கூர் மற்றும் ராஜ் பவ்சர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் வதோதராவின் மஞ்சல்பூரில் விலங்குகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முதலையைப் பிடித்து ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கச் செல்லும் போது, ​​பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் இந்தக் காட்சியை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பயங்கரம்; சிகிச்சைக்காக சென்ற பெண் நோயாளி பாலியல் வன்கொடுமை

விஸ்வமித்ரி நதிக்கரையில் அதிக எண்ணிக்கையில் முதலைகள் உள்ளன. இதனிடையே மழையால் நதி பெருக்கெடுத்து ஓடியதால், இந்த முதலைகள் நதியிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்துவிட்டன. சில இடங்களில் முதலைகள் வீடுகளுக்குள் நுழைந்த நிலையில், வேறு சில இடங்களில் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

புயல் அச்சுறுத்தலில் இருந்து குஜராத் மீட்பு

குஜராத்தின் கட்ச் கடற்கரையில் உருவாகி மாநிலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய 'அஸ்னா புயல்' தற்போது ஓமன் நோக்கி நகர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஏற்கனவே மழையால் தத்தளித்து வந்த குஜராத், புயல் அச்சுறுத்தலில் இருந்து தப்பித்துள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்ளூர் நிர்வாகம் சுமார் 3,500 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது. மேலும், குடிசைகள் மற்றும் மண் வீடுகளில் வசிக்கும் மக்கள் பிற கட்டிடங்களில் தஞ்சம் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கட்ச் மாவட்ட ஆட்சியர் அமித் அரோரா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் அரபிக்கடலில் உருவான 46 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த முதல் புயல் இதுவாகும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!