
நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை மாதத்தில் அரசு நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் வரிவருவாய் அதிகரித்து, சாதனை படைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி பெருமை கொண்டார்.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் டெல்லியில் நேற்று கூறியதாவது-
மத்திய அரசு நாடுமுழுவதும் ஒரே மாதிரி வரியான ஜி.எஸ்.டி. வரியை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. ஜி.எஸ்.டி.யில் 59.57 லட்சம் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டி. வரியாக ரூ.14 ஆயிரத்து 894 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரியாக ரூ.22 ஆயிரத்து 722 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியாக ரூ.47 ஆயிரத்து 469 கோடியும் வசூலாகியுள்ளது.
இறக்குமதி மூலம் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.20 ஆயிரத்து 964 கோடியும், புகையிலை உள்ளிட்ட பொருட்களின் மூலம் ரூ.7 ஆயிரத்து 198 கோடியும் வரி வசூலாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி இலக்கு ரூ.91 ஆயிரம் கோடி வருவாய் வசூலாக இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால், அதைக் காட்டிலும் அதிகமாக ரூ.92 ஆயிரத்து 283 கோடி வசூலாகியுள்ளது.
இதில் மாநில ஜி.எஸ்.டி. வரியாக ரூ.43 ஆயிரம் கோடியும், மத்திய ஜி.எஸ்.டி. வரியாக ரூ.48 ஆயிரம் கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 59.57 லட்சம் வரி செலுத்துபவர்களில் 38.3 லட்சம் பேர் ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இதில் 64 சதவீதம் ஆகும். இந்த புதிய முறைக்கு ஏறக்குறைய 72.33 லட்சம் பேர் மாறியுள்ளனர். 58.53 லட்சம் பேர் அனைத்து விதிமுறைகளையும் முடித்துள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின் ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கல் செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.