கர்நாடக ஹிஜாப் விவகாரம்: வழக்கு தொடர்ந்த மாணவியின் தந்தை, சகோதரர் மீது தாக்குதல்: ஹோட்டல் சூறை

By Pothy RajFirst Published Feb 22, 2022, 12:42 PM IST
Highlights

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த 6 முஸ்லிம் மாணவிகளில் ஒரு மாணவியின் தந்தை, சகோதரர் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.அவர்கள் இருவரும் நடத்தி வந்த ஹோட்டலையும் சிலர் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த 6 முஸ்லிம் மாணவிகளில் ஒரு மாணவியின் தந்தை, சகோதரர் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.அவர்கள் இருவரும் நடத்தி வந்த ஹோட்டலையும் சிலர் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

உடுப்பி மாவட்டம் மால்பே நகரில் இருவரும் நடத்தி வந்த ரெஸ்டாரண்டை நேற்று இரவு சிலர் வந்து அடித்து நொறுக்கி சென்றனர். அந்த மாணவியின் தந்தையையும், சகோதரரையும் தாக்கிவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிராக சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கவே அதற்கு மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அடுத்தடுத்த நகரங்களில் ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்தன. 

இதனால், கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் 6 பேர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ரம், “ வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது'' என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கு தொடர்ந்த 6 மாணவிகளில் ஒருவர் ஹஸ்ரா ஷாபியா. இவர் உடுப்பியில் உள்ள அரசு ப்ரீயுனிவர்சிட்டி கல்லூரியில் படித்து வருகிறார். இவரின் தந்தை ஹைதர் அலி. மால்பே நகரில் பிஸ்மில்லா ரெஸ்டாரண்ட்டை நடத்தி வருகிறார்

இந்நிலையில் ஹைதர் அலியும், அவரின் மகன் ஷைப் இருவரும் ஹோட்டல் பணியை முடித்துவிட்டு கடையை மூட தயாராகினர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென அவர்களிடம் ஏதோ பேசி வம்பிழுத்து இருவரையும் தாக்கிவிட்டு, ஹோட்டல் கண்ணாடிகளையும், அடித்து உடைத்துவிட்டு ,அங்குள்ள பொருட்களை தூக்கிவீசிவிட்டு தப்பிச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அந்த கும்பல் தாக்குதலில் காயமடைந்த மாணவியின் தந்தை ஹைதர் அலி, சகோதரர் ஷைப் இருவரும் மால்பே நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக மால்பே நகர போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

உடுப்பி காவல் கண்காணிப்பாளர் என்.விஷ்னுவர்த்தன் கூறுகையில் “ஷைப், ஹைதர் அலிக்கும், அந்த கும்பலுக்கும் இடையே நேற்று இரவு 9.30மணி அளவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் நடந்துள்ளது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அந்த கும்பல் ஹோட்டல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர். அந்த கும்பலில் இருந்த ஒருவர் ஷைப் மீது தாக்குதல் நடத்தி அறைந்துள்ளார். இந்தத் தகவல் கிடைத்து உடனடியாக போலீஸார் அந்த இடத்துக்குச் சென்று கும்பலைக் கலைத்தனர். சூழல் கட்டுக்குள் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மாணி ஷிபா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ என்னுடைய சகோதரர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். நான் ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், ஹிஜாப் எனது உரிமை என்று நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எங்களுடைய கடையின் பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. ஏன் இப்படி நடக்கிறது. என்னுடைய உரிமையை நான் கேட்கக்கூடாதா.அடுத்ததாக யார் பலியாகப்போகிறார்கள். இந்த சங்பரிவார் குண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

click me!