ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுப்பு… அப்பகுதிக்கு சீல்… வாரணாசியில் உச்சகட்ட பரபரப்பு!!

By Narendran SFirst Published May 16, 2022, 10:14 PM IST
Highlights

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட, தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், மசூதியில் களஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது.

இதுமட்டுமின்றி ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, 17 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மசூதியில் ஆய்வு பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மசூதியில் மூன்றாவது நாளாக இன்றும் வீடியோ பதிவுடன் ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வில் அனைத்து தரப்பினரும் திருப்தி அடைந்திருப்பதாக, மாவட்ட ஆட்சியர் கவுசல் ராஜ் சர்மா தெரிவித்தார். இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சில் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து அந்த பகுதிக்குள் யாரும் நுழைய கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மசூதியில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!