Vibrant Gujarat Global Summit 2024பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வை: உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டு!

Published : Jan 10, 2024, 07:14 PM IST
Vibrant Gujarat Global Summit 2024பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வை: உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டு!

சுருக்கம்

துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்பாடுகளுக்கு உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய 10ஆவது உச்சி மாநாடு 2024-ஐ காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பதாகும். இன்று முதல் வருகிற 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், 34 நாடுகள் மற்றும் 16 அமைப்புகள் பங்கேற்றுள்ளன. இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என உறுதி தெரிவித்தார்.

துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பல்வேறு தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மி மிட்டல் பேசுகையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டிற்கு வந்தததை நினைவு கூர்ந்தார். துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் உலகளாவிய நிகழ்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்கப் பிரதமர் முக்கியத்துவம் அளித்ததை அவர் பாராட்டினார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கைகளில் பிரதமரின் நம்பிக்கையையும், ஒவ்வொரு சர்வதேச மன்றத்திலும் உலகளாவிய தென்பகுதி நாடுகளின் குரலைப் பிரதமர் வலுப்படுத்துவதையும் அவர் எடுத்துரைத்தார்.

ஒரு நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதில் எஃகு தொழில்துறையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய லக்‌ஷ்மி மிட்டல், 2021-ம் ஆண்டில் ஆர்செலர் மிட்டல் நிபோன் ஸ்டீல் இந்தியா, ஹஜிரா விரிவாக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை நினைவுகூர்ந்தார்.  இத்திட்டத்தின் முதல் கட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஆண்டான 2026க்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் போன்ற பசுமைத் துறைகளில் முதலீடு செய்வது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் வலுவான தலைமைத்துவத்தைப் பாராட்டினார். நாட்டில் உற்பத்தித் தொழில்களுக்கு வழங்கப்படும் ஆதரவுக்கு ஜப்பானின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் தோஷிஹிரோ சுசுகி நன்றி தெரிவித்தார். இந்தியா இப்போது உலகின் 3-வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது என்று கூறிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பிரதமரின் முற்போக்கான அணுகுமுறைகளை எடுத்துரைத்தார். உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார வாகனத்தை ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தமது நிறுவனத்தின் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில்,  துடிப்புமிக்க குஜராத் இன்று உலகின் மிகவும் மதிப்புமிக்க முதலீட்டு உச்சி மாநாடாக உள்ளது என்று கூறினார். ஏனெனில் இது போன்று வேறு எந்த உச்சி மாநாடும் தொடர்ச்சியாக நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்தார். இது நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். துடிப்புமிக்க குஜராத்தின் ஒவ்வொரு மாநாட்டிலும் தாம் பங்கேற்றுள்ளதாக அவர்  தெரிவித்தார். தாம் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டிருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்த முகேஷ் அம்பானி, குஜராத்தின் சிறந்த மாற்றங்களுக்காகப் பிரதமரைப் பாராட்டினார்.

“இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் நவீன காலத்தின் மிகச்சிறந்த தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர்” என்று அவர் கூறினார். இந்தியாவின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி என்று அவர் தெரிவித்தார். உலகமே அவரைப் பாராட்டுகிறது என்றும் சாத்தியமற்றதை அவர் சாத்தியமாக்குகிறார் என்றும்  முகேஷ் அம்பானி கூறினார். தமது தந்தை திருபாய் அம்பானியை  நினைவுகூர்ந்த முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் எப்போதும் ஒரு குஜராத்தி நிறுவனமாகவே உள்ளது என்று கூறினார்.

அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா பேசுகையில், செமிகண்டக்டர் உற்பத்தியை இந்தியாவில்  அதிகரிப்பதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறும்போது எதிர்காலத்தில் இத்துறை ஒரு பெரிய பொருளாதார உந்து சக்தியாக மாறும் என்று அவர் கூறினார். துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு ஒரு செமிகண்டக்டர் சக்தியாக இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான தொலைநோக்கு சிந்தனைகளை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

 

 

இதுவரை துடிப்புமிக்க குஜராத், உச்சிமாநாட்டின் ஒவ்வொரு மாநாட்டிலும் பங்கேற்பதில் பெருமிதம் அடைவதாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறினார். பிரதமரின் அசாதாரண தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி தெரிவித்த அவர்,  பிரதமரின் மகத்தான லட்சியங்கள், துல்லியமான நிர்வாகம், குறைபாடற்ற செயலாக்கம் ஆகியவற்றைப் பாராட்டினார். இந்தியாவின் தொழில்துறை சூழலை சிறப்பாக மாற்றியமைக்க நாடு தழுவிய அளவில் செயல்பாடுகளைத் தூண்டியுள்ள பிரதமரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

தென் கொரியாவின் சிம்டெக் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப்ரி சுன் கூறுகையில், துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு போன்ற மாநாடுகள் வேகமாக வளர்ந்து வரும் நாட்டில் ஒரு புதிய விநியோகத் தொடர் கட்டமைப்பை உருவாக்கும் என்றார். இந்தியாவில் மற்றொரு பெரிய முதலீட்டுக்குத் தமது நிறுவனம் தயாராகி வருவதாகவும், மாநில மற்றும் மத்திய அரசுகள் இதற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது செமிகண்டக்டர் விநியோகத் தொடர் கட்டமைப்பில் இந்தியாவை மேலும் வலுவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Vibrant Gujarat Global Summit 2024: இந்தியாவை 2047ல் வளர்ந்த நாடாக உருவாக்குவோம்; பிரதமர் மோடி உறுதி!!

குஜராத்தில் நீண்ட காலமாக தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை உள்ளது என டாடா சன்ஸ் லிமிடெட் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்தார். இதற்குப் பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்றும் அவர் கூறினார். எதிர்காலத்திற்கான நுழைவாயிலாக குஜராத் தன்னை தெளிவாக நிலைநிறுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா, குஜராத்தின் நவ்சாரியில் பிறந்ததை சுட்டிக்காட்டினார். இன்று  டாடா குழுமத்தின் 21  நிறுவனங்கள் மாநிலத்தில் வலுவாக உள்ளன என்று அவர் கூறினார். டாடா குழுமத்தின் மிக முக்கியமான இடங்களில் குஜராத்தும் ஒன்றாகும் என்றும், அதன் வளர்ச்சிப் பயணத்தில் நாங்கள் முக்கிய பங்கு வகிப்போம் என்றும் அவர் கூறினார்.

நிவிடியா நிறுவனத்தின் மூத்தத் துணை தலைவர் சங்கர் திரிவேதி பேசகையில், உலகளாவிய தலைவர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு பற்றி பேசியது இதுவே முதல் முறையாகும் என்றார். பிரதமர் மோடியின் தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும்,  அவரது தலைமை ஆக்கபூர்வமான செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளை விரைந்து ஏற்று செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் திறமை, சிறந்த தரவு மற்றும் தனித்துவமான கலாச்சாரம் உள்ளது என்று அவர் கூறினார். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு நிவிடியா நிறுவனத்தின் ஆதரவையும் அவர் சுட்டிக்காட்டினார்.

துடிப்புமிக்க குஜராத் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை நனவாவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக டிபி வேர்ல்டின் தலைவர் சுல்தான் அகமது பின் சுலைம் தெரிவித்தார். மேலும் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக குஜராத் அரசாங்கத்தை அவர் பாராட்டினார். இந்தியாவின் முதன்மையான வணிகப் பகுதியாக குஜராத் அதிவேக வளர்ச்சியை எட்டிவருகிறது என்று அவர் கூறினார். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்ட சுல்தான் அகமது பின் சுலயேம், பிரதமரின் வலுவான தலைமையின் கீழ் இந்த வளர்ச்சி தொடரும் என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!