அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத்தில் போட்டி...!! பாஜக அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jun 25, 2019, 12:22 PM IST
Highlights

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக்கும் பாஜகவின் திட்டம் பலிக்காமலேயே போய்விட்டது. இதனையடுத்து, குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. 

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக்கும் பாஜகவின் திட்டம் பலிக்காமலேயே போய்விட்டது. இதனையடுத்து, குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 2-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதனிடையே, முந்தைய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பிடித்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் இடம் பெறவில்லை. அவர்களின் ஆலோசனைப்படி வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர் தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அமைச்சர் ஜெயசங்கர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அமைச்சராக பதவி ஏற்று ஒரு மாதம் ஆன நிலையிலும் அவர் பாஜகவில் சேராமலேயே இருந்து வந்தார். இதற்கு காரணம் அவரை தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டது தான்.

சொல்லப்போனால் ஜெய்சங்கரை அதிமுக எம்.பி.யாக்கி அவரை அதிமுக சார்பிலான மத்திய அமைச்சராக கூட கணக்கில் எடுத்துக் கொள்ள பாஜக தயாராக இருந்தது. இதனால் தான் அவர் பாஜகவில் சேராமல் காத்திருக்க நேரிட்டது. ஆனால் பாஜக தரப்பில் இருந்து பல்வேறு முறை கோரிக்கைகள் விப்பட்டும் மாநிலங்களை எம்.பி. பதவி விவகாரத்தில் அதிமுகவிடம் இருந்து சாதகமாக பதில் கிடைக்கவில்லை. 

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பாஜக கூட்டணி தான் காரணம் என்று கட்சிக்குள் பிரச்சனை இருக்கிறது. இந்த நிலையில் ஜெய்சங்கரை அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக்கினால் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க முடியாது என்று ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகிய இருவருமே பிடிவாதமாக இருந்ததாக சொல்கிறார்கள். 

ஆனாலும் கூட பாஜக தரப்பு தொடர்ந்து ஜெய்சங்கர் விவகாரம் குறித்து அதிமுக தலையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கு காரணம் தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் யாரும் இல்லை என்கிற விமர்சனத்தை தவிடுபொடியாக்க தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்தே எம்.பி.யாக்க பாஜக முயன்றது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்த பிறகே குஜராத் மாநிலத்தில் இருந்து ஜெய்சங்கரை எம்.பி.யாக்க பாஜக முடிவெடுத்து அறிவிப்பும் வெளியிட்டுவிட்டது.

click me!