கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது. அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ளது.
ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தியோகர் கரூவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுவுக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனை அடுத்து, கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ராஞ்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் இரண்டு வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சைபாசா கரூவுலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில் லாலுவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் லாலு ஜாமீன் பெற்றுள்ளார்.
சைபாசா கரூவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் லாலுவுக்கு கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது மட்டுமல்லாது லாலுவுக்கு எதிரான மேலும் 2 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. உடல் நலக்குறைவால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், 4-வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தும்கா கரூவூலத்தில் மோசடி செய்து பணம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறியது.
குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் 19 பேரின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.