புதிய சேனல், நாளேடு தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி...! விரைவில் உதயம்...!

First Published Oct 3, 2017, 6:25 PM IST
Highlights
edappadi palanisamy will be started on television and newspaper


தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு அறிவிக்கவும், கட்சி சார்பிலான செய்திகளை தொண்டர்களுக்கு கூறவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புதிய டி.வி. சேனல், நாளேடு ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” மற்றும் “ஜெயா டி.வி.” சசிகலாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு பொதுச்செயலாளர் சசிகலா, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஒதுக்கி வைத்ததில் இருந்து கடுமையாக விமர்சனம் செய்து நமது எம்.ஜி.ஆர். ஜெயா டி.வி. ஆகியவை செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

 அதேசமயம்,தினகரனுக்கும், சசிகலாவுக்கும் ஆதரவாக மட்டுமே செய்திகள் ஒளிபரப்பாகின்றன.மேலும், டி.டி.வி தினகரனின் அறிவிப்புகள் மட்டுமே நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் வருகிறது.

இதனால், தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராகவும், மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தையும் நமது எம்.ஜி.ஆர். நாளேடும், ஜெயா.டிவியும் பரப்புகிறதோ என்ற அச்சத்தை முதல்வர் எடப்பாடி தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி தரப்பு புதிதாக ஒரு ேசனலையும், நாளேட்டையும் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக முதல்வர் எடப்பாடியின் நம்பிக்கையைப் பெற்ற மூத்த அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, புதிய சேனல், நாளேடு தொடங்குவது குறித்து முக்கிய ஊடக நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட பெயர்கள் பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், எந்த பெயரும் இதுவரை இறுதிசெய்யப்படவில்லை. விரைவில் உறுதியாகும் என்று மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

அதேசமயம், டி.வி. சேனலுக்கும்,நாளேடுக்கும் எம்.ஜி.ஆர், அம்மா என்ற பெயரைத் தாங்கி வரும் வகையில் அமைக்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசிடம் டி.வி. சேனலுக்கு லைசன்ஸ் பெரும் பணிகள் மிகுந்த மும்முரமாக நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அதிமுகவில் இருந்து பிரிந்து ஓ.பன்னீர் செல்வம் தனியாக செயல்பட்ட போது, இதேபோன்று தனியாக ஒரு டி.வி.சேனல் தொடங்குவது குறித்து பேசப்பட்டது. தற்போது கலாச்சார அமைச்சராகவும், ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவரான மாபா பாண்டியராஜனிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு இணைந்தவுடன் அந்த திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!