உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக்கசிவு காரணமாக 300 பள்ளிக்குழந்தைகளுக்கு மயக்கம் ,வயிற்றுவலி, மூச்சுத்திணறல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாமிலி அருகே சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையின் அருகே சரஸ்வதி மந்திர் குழந்தைகள் பள்ளி இயங்கிவருகிறது. இந்நிலையில் அந்த சர்க்கரை ஆலையில் திடீரென ரசாயன வாயுக்கசிவு ஏற்பட்டது.
ஆலையில் ஏற்பட்ட இந்த ரசாயன கசிவின் காரணமாக அருகில் இருந்த பள்ளியில் படித்துவரும் சுமார் 300 குழந்தைகளுக்கு வயிற்றுவலி, மயக்கம் , மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல குழந்தைகள் மூச்சுத்திணறலால் மயக்கம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பெரும்பாலான பள்ளிக்குழந்தைகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ரசாயன வாயுக்கசிவால் மிகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சர்க்கரை ஆலைக்கழிவுகளை வெளியில் கொட்டுவதால் இதுபோன்ற ரசாயன வாயுக்கசிவு அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.