டெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலின் கோட்டையை பாஜக தகர்த்தது எப்படி? ஆம் ஆத்மி சறுக்கியது எங்கே?

Published : Feb 08, 2025, 01:36 PM ISTUpdated : Feb 08, 2025, 01:38 PM IST
டெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலின் கோட்டையை பாஜக தகர்த்தது எப்படி? ஆம் ஆத்மி சறுக்கியது எங்கே?

சுருக்கம்

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளது. பாஜக மாபெரும் வெற்றியை ஈட்ட காரணம் என்ன? ஆம் ஆத்மி சறுக்கியது எங்கே? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

டெல்லி தேர்தலில் பாஜக அமோக வெற்றி 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக, டெல்லியில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் கோதாவில் குதித்தன. இந்த கட்சிகள் மாறி, மாறி கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்திருந்தன.

இந்நிலையில், இன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இப்போது வரை பாஜக 47 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 23 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்,  மணிஷ் சிஷோடியா தோல்வியை சந்தித்துள்ளனர். 

பாஜக வெற்றிக்கு காரணம் என்ன?

டெல்லி தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஒன்று சேராமல் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. இதனால் இரண்டு கட்சிகளின் வாக்குகளும் சிதறி அது பாஜக பக்கம் கொண்டு சேர்த்து விட்டது. இது பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும் டெல்லியின் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் இந்த முறை பாஜகவுக்கு முழுமையாக வாக்களித்தே அந்த கட்சி பெரும் வெற்றியை ஈட்ட காரணமாகும்.

2015 மற்றும் 2020ம் ஆண்டுகளின் டெல்லி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்த டெல்லியின் நடுத்தர வர்க்க மற்றும் பூர்வாஞ்சலி வாக்காளர்கள் முழுமையாக பாஜக பக்கம் சாய்ந்து விட்டனர். மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி, மத்திய டெல்லி மற்றும் புது டெல்லி முழுவதும் நடுத்தர வர்க்கத்தினர் ஆதிக்கம் செலுத்தும் பெரும்பாலான இடங்களிலும், கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த பூர்வாஞ்சலி வாக்காளர்கள் குறிப்பிடத்தக்க தேர்தல் செல்வாக்கைக் கொண்ட 25 இடங்களிலும் பாஜக இந்த தேர்தலில் வெற்றியை சுவைத்துள்ளது.

நடுத்தர வர்க்கத்தினர் ஆம் ஆத்மி மீது அதிருப்தி 

கடந்த 2020 தேர்தலில் மேற்கு டெல்லி மற்றும் புது டெல்லி பகுதிகளில் பூஜ்ஜியத்தை பதிவு செய்த பாஜக, 2025 சட்டப்பேரவை தேர்தலில் மேற்கண்ட இடங்களில் அதிக வாக்குகளை அறுவடை செய்துள்ளது. தெற்கு டெல்லி மாவட்டத்தில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் 11 இடங்களில் பாஜக வெற்றியின் அருகில் உள்ளது. 2020 தேர்தலில் ஆம் ஆத்மி இந்த 15 இடங்களில் 14 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த பகுதிகள் முழுமையாக பாஜக வசம் சென்றுள்ளது.

அங்கீகரிக்கப்படாத காலனிகள் நிறைந்த டிரான்ஸ் யமுனா பகுதியில் உள்ள 20 இடங்களில், பாஜக 12க்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க முன்னிலை பெற்றுள்ளது. 2015 தேர்தலில் இங்கு 3 இடங்களையும், 2020 தேர்தலில் இங்கு 8 இடங்களில் மட்டுமே பாஜக கைப்பற்றி இருந்தது. டெல்லி வாக்காளர்களில் சுமார் 40% பேரைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் ஆம் ஆத்மி கட்சி மீது கடும் அதிப்ருதி அடைந்ததை தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கின்றன.

கைகொடுத்த இலவச வாக்குறுதிகள்

தலைநகர் டெல்லியை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு ஆகியவற்றிலும், டெல்லியின் உள்கட்டமைப்பில் ஆம் ஆத்மி அரசு சரியாக கவனம் செலுத்தாததே கெஜ்ரிவால் அரசு மீது நடுத்தர வர்க்கத்தினரின் அதிருப்திக்கு முக்கிய காரணம் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். டெல்லி தேர்தலுக்கு சற்று முன்னதாக 8வது சம்பள கமிஷன் அறிவிப்பு பாஜகவிற்கு மற்றொரு சாதகமான அம்சமாக மாறி விட்டது. ஏனெனில் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதியளித்த கவர்ச்சிகரமான இலவச திட்டங்கள் 2015 மற்றும் 2020 சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு எந்த அளவுக்கு கைகொடுத்தது என்பதை பாஜக உன்னிப்பாக கவனித்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம், பெண்க‌ளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை, மாணவர்களுக்கு இலவச கல்வி என பல்வேறு இலவச வாக்குறுதிகளை பாஜக அள்ளித்தெளித்தது. 

இதனால் நடுத்தர வாக்காளர்கள் அப்படியே பாஜக பக்கம் சாய்ந்து விட்டனர். ஒட்டுமொத்தத்தில் இலவசங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பாஜக, இப்போது அந்த இலவசங்களை வைத்தே ஆம் ஆத்மியை வீழ்த்தி விட்டது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!