சோனியா காந்தி மற்றும் ஸ்மிருதி இரானி இடையே பேச்சு மோதல்… அவையில் உச்சக்கட்ட பரபரப்பு!!

By Narendran SFirst Published Jul 28, 2022, 7:33 PM IST
Highlights

நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி மற்றும் ஸ்மிருதி இரானி இடையே பேச்சு மோதல் ஏற்பட்டதை அடுத்து அவையில் பரபரப்பு ஏற்பட்டது. 

நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி மற்றும் ஸ்மிருதி இரானி இடையே பேச்சு மோதல் ஏற்பட்டதை அடுத்து அவையில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதலே பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கூச்சல், எம்.பி.க்கள் சஸ்பெண்ட், தர்ணா என இந்த மழைக்கால கூட்டத் தொடர் பரபரப்பாக சென்று வருகிறது.

இதையும் படிங்க: மேற்கு வங்க அமைச்சர் பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்… அம்மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!

இந்த நிலையில், இன்று மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ராஷ்டிரபத்னி என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைத்தார். தான் தவறுதலாக கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார். எனினும், அதனை ஏற்க மறுத்து பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது, என்ன நடந்தது என்பதை அறிவதற்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் ரமா தேவியிடம் சென்றார். அப்போது பாஜகவின் ஸ்மிருதி இரானி அவரை இடைமறித்துள்ளார். நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் என சோனியா காந்தி ஸ்மிருதி இரானியிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பேச்சு மோதல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு 10 கேள்விகள்: அரசர் எனக்கூறி வம்பிழுத்த ராகுல் காந்தி

ஆளுங்கட்சி எம்பிக்களை சோனியா காந்தி மிரட்டியதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியும், ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவையில் ஸ்மிருதி இரானி வலியுறுத்தி பேசினார். குடியரசுத் தலைவர் குறித்து ராஷ்டிரபத்னி என குறிப்பிடும்படி ஆதிர் ரஞ்சன் சௌத்ரியிடம் சோனியா காந்திதான் கூறியதாகவும் ஸ்மிருதி இரானி குற்றஞ்சாட்டினார். ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இதனிடையே ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

click me!